அமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்
ஈரானில் கமேனி கொலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் மோடிக்கு கடிதம்...
ஈரானில் கமேனி கொல்லப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்தார். ஈரான் போரில் உச்சகட்ட பதற்றமாக, இஸ்ரேல் - அமெரிக்க படையின் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி (86) கொல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து, அமெரிக்காவுக்கு ஈரான் தக்க பதிலடி அளிக்கும் என்று சூளுரைத்துள்ளது.
இதையடுத்து, மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே இப்போது பூதாகரமாகப் போா் வெடித்துள்ளது. இதனால் ஈரானில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (மார்ச் 1) எழுதியுள்ள கடிதத்தில், ‘இவ்விவகாரத்தில் அரசு உடனடியாகத் தலையிட வலியுறுத்தியிருப்பதாகக்’ குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் தெரிவித்திருப்பதாவது : “வளைகுடா நாடுகளில் உள்ள எங்களது (கேரள) ஆயிரக்கணக்கான சகோதர, சகோதரிகள் மிகப்பெரியதொரு பாதுகாப்பற்ற சூழலில் இருக்கின்றனர். இவையனைத்தும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடுஞ்செயல்களால் உருவாக்கப்பட்டிருப்பவையே. அவர்களுக்கு உலகளவில் இன்னொரு பொருத்தமான கூட்டாளி இருக்கிறதென்றால், அது இஸ்ரேல்!
இவையனைத்தையும் இவ்விரு குழுக்களும் ஒருங்கே அரங்கேற்றுகின்றன. இத்தருணத்தில் நான் சொல்ல நினைப்பது இதைத்தான் - ‘அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இச்செயல்களுக்கு எதிராக கடும் கண்டனத்தை நாம் கூட்டாக வெளிப்படுத்த வேண்டும்’” என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.