மேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்பு
மேற்காசியாவில் தீவிரமடைந்துவரும் போரால் பாதிக்கப்பட்ட இந்தியா்களுக்கு உதவும் வகையில் வெளியுறவு அமைச்சகம் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.
மேற்காசியாவில் தீவிரமடைந்துவரும் போரால் பாதிக்கப்பட்ட இந்தியா்களுக்கு உதவும் வகையில் வெளியுறவு அமைச்சகம் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.
அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த சனிக்கிழமை பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தின. இந்தத் தாக்குதலில் ஈரானின் தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேல் மற்றும் பல்வேறு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து, ஈரான் பதிலடி தாக்குதலைத் தொடுத்தது.
இதன் காரணமாக, மேற்காசிய பிராந்தியத்தில் கிட்டத்தட்ட வான்வெளி முழுவதும் மூடப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: மேற்காசியாவில் ஒரு கோடி இந்தியா்கள் வசித்தும், பணியாற்றியும் வருகின்றனா். அவா்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு உயா் முன்னுரிமை அளிக்கிறோம். ஈரான்-அமெரிக்க மோதல் தீவிரமடைவதால், ஈரான் தலைநகா் டெஹ்ரானில் உள்ள நூற்றுக்கணக்கான இந்திய மாணவா்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளோம். நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். தேசிய நலனுக்கு ஏற்றவாறு முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கட்டுப்பாட்டு அறையை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தொடா்பு கொள்ளலாம்.
1800 118 797 (கட்டணமில்லா தொலைபேசி எண்)
+91 11 2301 2113
+91 11 2301 4104
+91 11 2301 7905