ஈரான் போர்! மத்திய கிழக்கு நாடுகளில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து: சிபிஎஸ்இ அறிவிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக 12ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக சிபிஎஸ்இ அறிவிப்பு
ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் 12ஆம் வகுப்புகளுக்கான அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.
முன்னதாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் உள்பட மார்ச் 16 முதல் ஏப்ரல் 10 வரையில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த 12ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.
மேலும், தேர்வு முடிவுகள் எந்த முறையில் மதிப்பீடு செய்யப்படும் என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.