ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 398! ஒரே நாளில் 25% உயர்த்திய இலங்கை!
பெட்ரோல் விலையை ஒரே நாளில் 25% உயர்த்திய இலங்கை அரசு...
அமெரிக்க, இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக இலங்கை அரசு பெட்ரோல் விலையை 25% உயர்த்தியுள்ளது.
இலங்கை அதிபர் அநுரகுமார திஸ்ஸநாயக, “மத்திய கிழக்குப் பகுதியில் நடைபெறும் போர் இலங்கையின் எரிசக்தி விநியோகத்தைப் பாதிக்கக்கூடும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்” என்று கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் கடந்த புதன்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு நான்கு வேலை நாள்கள் மட்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்த இலங்கை அதிபர் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறைக்கு மாறும் ஏற்பாடுகளை மேற்கொள்ள நிறுவனங்களிடம் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, இலங்கை அரசு கடந்த வாரம் பெட்ரோல் விலை 8% உயர்த்தியிருந்தது. மேலும், பெட்ரோல் நுகர்வை கட்டுப்படுத்தும் விதமாக ரேஷன் முறையில் பெட்ரோல் வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், இன்று பெட்ரோல் விலையை மேலும் 25% உயர்த்தி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், ரூ.317 ஆக இருந்த 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 398 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி டீசல் விலையும் ரு. 79 உயர்த்தி ரூ. 382 -க்கு விற்கப்படுகின்றது.
இந்த விலையேற்றத்தின் மூலம் 15 முதல் 20 சதவீதம் எரிசக்தி பயன்பாடு குறைய வாய்ப்புள்ளதாக இலங்கை பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க, இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதைத் தொடர்ந்து உலகின் பல நாடுகள் எரிசக்தி பற்றாக்குறையால் அவதிப்படுகின்றன. இதில், இலங்கை எண்ணெய் இறக்குமதிக்கு அதிகளவு வளைகுடா நாடுகளை நம்பியுள்ளது. மேலும், மின் உற்பத்திக்கு நிலக்கரியையும் அங்கிருந்தே இறக்குமதி செய்கிறது.