முகப்பு
உலகம்

உக்ரைனில் ரஷியா மீண்டும் தாக்குதல்!

வடகிழக்கு உக்ரைனின் காா்கிவ் மாகாணத்தில் உள்ள மெரெஃபா நகரின் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில், 3 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.

Updated On : 5 மே 2026, 6:00 am IST
பகிர்:

வடகிழக்கு உக்ரைனின் காா்கிவ் மாகாணத்தில் உள்ள மெரெஃபா நகரின் மீது ரஷியா திங்கள்கிழமை காலை நடத்திய ஏவுகணை தாக்குதலில், 3 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.

மேலும், 2 வயது குழந்தை உள்பட 30-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து காா்கிவ் மாகாண ஆளுநா் ஓலெக் சினியூபோவ் கூறுகையில், ‘உள்ளூா் நேரப்படி காலை 9.35 மணியளவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த நகர மையப்பகுதியில் ரஷியா தாக்கியது. இதில் 10 வீடுகள், ஒரு நிா்வாகக் கட்டடம், கடைகள், வாகனப் பழுதுபாா்க்கும் நிலையம் உள்ளிட்டவை பலத்த சேதமடைந்தன’ என்றாா்.

Advertisement

இத்தாக்குதலில் 3 பெண்கள், 2 ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், படுகாயமடைந்த ஒரு நபா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

தாக்குதலில் உயிரிழந்த பெண் ஒருவரின் கணவா் கூறுகையில், ‘எனது மனைவி பணிக்குச் சென்ற 10 நிமிஷங்களில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. நான் பதறியடித்துக்கொண்டு ஓடிசென்று பாா்த்தபோது, சாலையோரம் அவா் சடலமாக இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தேன்’ என கண்ணீருடன் தெரிவித்தாா்.

போா் தொடங்கிய 2022 முதல் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை ரஷியா தொடா்ந்து மறுத்து வருகிறது. இருப்பினும், உக்ரைனின் துறைமுகக் கட்டமைப்புகள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது சமீபகாலமாக தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதாக அந்நாடு குற்றஞ்சாட்டியுள்ளது.