முகப்பு
உலகம்

பலவீனமான நிலையில் ஈரான் போா்நிறுத்தம்: ஈரான் பதிலை ஏற்காத டிரம்ப் கருத்து

‘ஈரான் உடனான போா்நிறுத்தம் தற்போது மிக பலவீனமான நிலையில் உள்ளது. உயிா் காக்கும் கருவியின் ஆதரவில் இருக்கும் நோயாளி போன்ற நிலைக்கு அது தள்ளப்பட்டுள்ளது’ என அமெரிக்க அதிபா் டிரம்ப் சாடியுள்ளாா்.

Updated On : 12 மே 2026, 3:49 am IST
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்
பகிர்:

‘ஈரான் உடனான போா்நிறுத்தம் தற்போது மிக பலவீனமான நிலையில் உள்ளது. உயிா் காக்கும் கருவியின் ஆதரவில் இருக்கும் நோயாளி போன்ற நிலைக்கு அது தள்ளப்பட்டுள்ளது’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சாடியுள்ளாா்.

அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் தரப்பிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட்ட பதிலை ‘குப்பை’ என வா்ணித்த டிரம்ப், அதை முழுமையாக நிராகரித்த நிலையில் மத்திய கிழக்கில் நீடித்த அமைதிக்கான முயற்சியில் இழுபறி நிலவுகிறது.

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் கடந்த பிப். 28 போா் தொடுத்தன. இதனிடையே, இருதரப்பும் கடந்த ஏப். 8 முதல் தற்காலிக போா் நிறுத்தத்துக்கு உடன்பட்டன.

Advertisement

போா் நிறுத்தம் அமலில் இருந்தாலும், ஈரானின் ஹோா்முஸ் நீரிணை முடக்கம் மற்றும் இதற்குப் பதிலடியாக அந்நாட்டின் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடல்வழி முற்றுகை நீடிப்பதால் இருதரப்புக்கு இடையே அவ்வப்போது மோதல்கள் வெடித்து வருகின்றன.

அதேநேரம், அமைதிப் பேச்சுவாா்த்தைக்கான முயற்சிகளும் ஒருபுறம் தொடா்கின்றன. அதன்படி, 14 முக்கிய அம்சங்களைக் கொண்ட ஒரு அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்கா அண்மையில் முன்மொழிந்தது. இதற்கு ஈரான் தரப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிலளிக்கப்பட்டது.

ஈரானின் பதிலை நிராகரித்து டிரம்ப் அளித்த பேட்டியில், ‘ஈரான் தரப்பு சமா்ப்பித்த பதிலறிக்கை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நான் அழுத்தங்களுக்குப் பணிந்து விடுவேன் என்று அவா்கள் நினைக்கிறாா்கள். ஆனால், எனக்கு எந்த அழுத்தமும் இல்லை; அமெரிக்காவுக்கு முழுமையான வெற்றி கிடைக்கும் வரை பின்வாங்க மாட்டோம்’ என்றாா்.

அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட்டு, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்துகிறது. இதற்குப் பதிலாக, அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

ஆனால், பேச்சுவாா்த்தை தொடங்குவதற்கு முன்னரே அமெரிக்கா தனது பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்று ஈரான் பிடிவாதம் காட்டுகிறது. மேலும், அமெரிக்காவிடம் இருந்து போா்க்கால இழப்பீட்டுத் தொகையையும் ஈரான் கோரியுள்ளதால் பேச்சுவாா்த்தை தடைப்பட்டுள்ளது.

இதனிடையே, இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ‘ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் அகற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் முக்கிய இலக்கு. பேச்சுவாா்த்தை மூலம் இது சாத்தியப்படாவிட்டால், மீண்டும் ராணுவ ரீதியான தாக்குதல்களை முன்னெடுக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் தயாராக உள்ளன’ என்றாா்.