திடீரென ஈரான் சென்ற பாக். உள்துறை அமைச்சர்! அமெரிக்கா உடன் மீண்டும் அமைதிப்பேச்சு?
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி திடீரென ஈரான் சென்றுள்ளது குறித்து...
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி திடீரென ஈரான் சென்றுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பிப். 28 முதல் போர் நடைபெற்று வந்த நிலையில், தற்காலிகப் போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் தலைமையிலான அமைதிப்பேச்சுக்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டன.
ஆனால், பாகிஸ்தான் முன்னிலையில் நடைபெற்ற அமைதிப்பேச்சுக்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததால், ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு வருகின்றன.
Advertisement
இதனால், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை முழுமையாக ஈரானிய படைகளால் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நக்வி எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி திடீரென கடந்த சனிக்கிழமை (மே 16) அன்று ஈரானுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதுபற்றி, ஈரானிய மற்றும் பாகிஸ்தானிய ஊடகங்களில் வெளியான செய்தியில், அமைச்சர் நக்வியின் இந்த 2 நாள் அரசு முறைப் பயணம் இருதரப்புக்கும் இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் முயற்சியாக இருக்கக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, சீனா நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹோர்முஸ் நீரிணை விவகாரம் குறித்து அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்குடன் விவாதம் மேற்கொண்டார்.
அப்போது, ஹோர்முஸ் நீரிணை எந்தவொரு கட்டுப்பாடுமின்றி முழுவதுமாகத் திறக்கப்பட வேண்டுமென சீன அதிபர் ஜின்பிங் வலியுறுத்தினர். இந்தச் சூழலில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் இந்த திடீர் ஈரான் பயணம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.