அமெரிக்கா - ஈரான் மோதல்! பாக். தலைமையிலான அமைதிப் பேச்சுக்கு சௌதி அரேபியா வலியுறுத்தல்!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தான் தலைமையிலான அமைதிப் பேச்சுக்கு சௌதி அரேபியா அரசு வலியுறுத்தல்...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் பாகிஸ்தான், கத்தார் அரசுகளின் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென சௌதி அரேபியா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அபாச்சி ஹெலிகாப்டரை கடந்த ஜூன் 8 அன்று ஈரானிய படைகள் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே கடந்த 2 நாள்களாக மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ஈரானிய படைகள் ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாக முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளன. இதனால், சர்வதேச அளவில் மீண்டும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நள்ளிரவில் நடத்தப்பட்ட பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் மீதான ஈரானின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள சௌதி அரேபியா அரசு, பாகிஸ்தான் மற்றும் கத்தார் அரசுகளின் தலைமையிலான அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பாகிஸ்தான் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுகள் தொடர்ந்து தோல்வியடைந்தன. இஸ்லாமாபாதில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோரின் முன்னிலையில் முதல் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.