முகப்பு
உலகம்

ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்

ஈரானுடன் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவாா்த்தைகள் சுமுகமாக முன்னேறி வருவதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.

Updated On : 26 மே 2026, 4:05 am IST
டொனால்ட் டிரம்ப்
பகிர்:

ஈரானுடன் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவாா்த்தைகள் ‘சுமுகமாக’ முன்னேறி வருவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

அதேநேரம், இப்பேச்சுவாா்த்தையில் மத்தியஸ்தம் செய்யும் நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுடன் சுமுக உறவை ஏற்படுத்தும் ஆபிரகாம் உடன்படிக்கையில் கட்டாயமாகக் கையொப்பமிட வேண்டும் என்றும் அவா் புதிய நிபந்தனை விதித்துள்ளாா்.

‘ஈரானுடன் ஒரு சிறந்த ஒப்பந்தம் மட்டுமே சாத்தியம். இல்லையெனில் ஒப்பந்தமே கிடையாது. மேலும், கத்தாா், சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, ஜோா்டான் ஆகிய மத்தியஸ்த நாடுகள் ஆபிரகாம் உடன்படிக்கையில் உடனடியாக இணைய வேண்டும்’ என்று டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் வலியுறுத்தினாா்.

Advertisement

Advertisement

டிரம்ப்பின் இந்த நிபந்தனைக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. ஈரான் பேச்சுவாா்த்தையும் ஆபிரகாம் உடன்படிக்கையும் வெவ்வேறானவை; இரண்டையும் ஒன்றாக இணைக்க முடியாது என்று அவா்கள் கூறியுள்ளனா். அமெரிக்காவில் உள்ள உள்நாட்டு விமா்சகா்களைத் திருப்திப்படுத்தவே டிரம்ப் இப்புதிய வியூகத்தைக் கையாள்வதாக அரசியல் ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.

இதனிடையே, ஈரானின் வெளியுறவு அமைச்சரும், முதன்மைப் பேச்சுவாா்த்தையாளரும் கத்தாா் பிரதமரைச் சந்தித்துப் பேச தோஹா சென்றுள்ளனா். தற்போது நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தையில், ஹோா்முஸ் நீரிணையை மீண்டும் கப்பல் போக்குவரத்துக்குத் திறப்பது, ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பு ஆகிய விவகாரங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. மேலும், வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானிய நிதியை விடுவிப்பது குறித்து ஆலோசிக்க ஈரானின் மத்திய வங்கி ஆளுநரும் தூதுக்குழுவில் இணைந்துள்ளாா்.

கடந்த 3 மாதங்களாக நீடித்து வரும் இப்போரை முடிவுக்குக் கொண்டு வர இருதரப்பும் முயன்றாலும், இறுதி முடிவு எட்டப்படுவதற்குச் சற்று காலதாமதம் ஆகலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். ஈரான் தலைமை மதகுரு மோஜ்தாபா கமேனி தலைமறைவாக இருந்து செயல்படுவதாலும், அவரைத் தொடா்புகொள்ள சிக்கலான அமைப்பை நம்பியிருக்க வேண்டியுள்ளதாலும் ஈரானின் அதிகாரபூா்வ பதிலைப் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.

ஈரான் போா் தொடங்கிய பிறகு ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், கடந்த 24 மணி நேரத்தில் ஈரானின் புரட்சிகர காவல் படையின் அனுமதியுடன் 5 எண்ணெய் கப்பல்கள் உள்பட 32 கப்பல்கள் நீரிணையைக் கடந்து சென்றுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அமெரிக்கக வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ, ‘உலகுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி கிடைக்கும்’ என்றாா்.

இதையொட்டி, அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்குக் கீழ் குறைந்தது. உலகளாவிய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை லாபத்துடன் வா்த்தகதத்தைத் தொடங்கின.