நடிகர் மாரிமுத்துவின் இடத்தை யாராலும் நிரப்ப இயலாது என எதிர்நீச்சல் தொடர் நாயகி மதுமிதா தெரிவித்துள்ளார்.
இயக்குநரும் நடிகருமான மாரிமுத்துவின் மறைவுக்கு வருடன் எதிர்நீச்சல் தொடரில் நடித்த நாயகி மதுமிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் மாரிமுத்துவுடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில், கடும் உழைப்பு, மகிழ்ச்சி, அன்பு, உற்சாகம் உள்ளிட்டவற்றை பெரும் உடமைகளை விட்டுச்சென்றுள்ளீர்கள். அவற்றை யாராலும் நிரப்ப இயலாது. நீங்கள் எப்போதும் எங்கள் மனதில் நிறைந்திருப்பீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கொண்டவர் நடிகர் மாரிமுத்து. எதிர்நீச்சலில் வட்டார வழக்கு மொழியில் இந்தாம்மா ஏய் என அழைப்பது இவரின் தனித்துவமாக மாறியது.
கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய இரு படங்களை மாரிமுத்து இயக்கியுள்ளார். பரியேறும் பெருமாள், கொம்பன், ஜெயிலர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.