சென்னை கோயம்பேடு சந்தையில் சின்னத்திரை தொடருக்கான சண்டைக் காட்சி படப்பிடிப்பு நடந்துள்ளது.
கோயம்பேடு சந்தையில் திரைப்படங்களுக்காக சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது திரைப்படங்களுக்கு இணையாக சின்னத்திரை தொடர்களிலும் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக பலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் தொடர் ஆனந்த ராகம். இந்தத் தொடரில் நடிகை அனுஷா பிரதாப் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அழகப்பன் நடிக்கிறார்.
ஆனந்த ராகம் தொடரில் நாயகிக்கு அடிக்கடி சண்டைக் காட்சிகள் இடம்பெறும். இதனால், ஆனந்த ராகம் தொடரில் ஈஸ்வரி பாத்திரத்தில் நடிக்கும் அனுஷாவுக்கு அதிரடி நாயகி என்ற பெயரும் ரசிகர்கள் மத்தியில் உண்டு.
சமீபத்தில் வெளியான முன்னோட்ட விடியோவிலும் கோயிலில் ரெளடிகளிடம் சிக்கிக்கொள்ளும் மாமியாரை புல்லட் வண்டியில் வந்து காப்பாற்றும் வகையில் அனுஷாவுக்கு காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
சீரியல்களில் நாயகிகள் பெரும்பாலும் அழுவது, ஏமாற்றப்படுவதுபோன்று காட்டப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற அதிரடி காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
படிக்க | தமிழ்நாட்டின் டாப் 10 சீரியல்கள்!
அந்தவகையில், தற்போது சென்னை கோயம்பேடு சந்தையில் ஆனந்த ராகம் தொடருக்கான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட விடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை அனுஷா பகிர்ந்துள்ளார்.
அதில், கூட்டம் நிறைந்த பகுதியில் நடிகை அனுஷா, ரெளடிகளை விரட்டி விரட்டி அடிப்பது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கோயம்பேடு சந்தையில், திரைப்படங்களுக்காக சண்டைக் காட்சிகள் படமாக்கப்படுவது வழக்கம். தற்போது திரைப்படங்களுக்கு இணையாக சீரியல்களும் படப்பிடிப்பு செய்து காட்சிகளை ரசிக்கவைப்பதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
சமீபகாலமாக திரைப்படங்களுக்கு இணையாக காதல் காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் சின்னத்திரை தொடர்களில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.