பிரபல ஹிந்தி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி புதிய இசை நிறுவனத்தைத் துவங்கியுள்ளார்.
ஹிந்தியில் மிகவும் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் சஞ்சய் லீலா பன்சாலி. சரித்திரம் தொடர்பான திரைப்படங்கள் எடுப்பதிலும் காதல் தொடர்பான படங்கள் எடுப்பதிலும் பிரபலமானவர்.
இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான கங்குபாய் கதியவாடி திரைப்படத்தில் நடித்த ஆலிய பட்டிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. மேலும் சிறந்த ஒப்பனை, சிறந்த எடிட்டிங், சிறந்த வசனம், சிறந்த தழுவலுக்கான திரைக்கதை ஆகிய பிரிவுகளில் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், எடிட்டர், இசையமைப்பாளர் என கலக்குகிறார். இவர் இசையமைத்து இயக்கிய பத்மாவதி, கங்குபாய் கதியவாடி ஆகிய படங்களின் பாடல் மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
சஞ்சய் லீலா பன்சாலி நடிகர் ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கௌஷல் ஆகியோரை வைத்து ‘லவ் அண்ட் வார்’ என்கிற புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதை சமீபத்தில் அறிவித்துள்ளார். மேலும் ஹீரமண்டி எனும் இணையத்தொடர் ஒன்றினையும் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சஞ்சய் லீலா பன்சாலிதனது எக்ஸ் பக்கத்தில் தான் புதிய இசை நிறுவனத்தை தொடங்கியதாக அறிவித்துள்ளார். அந்தப் பதிவில், “இசை எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியையும் அமைதியையும் தருகிறது. என்னுடன் இசையும் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது. நான் இப்போது தனியாக ’பன்சாலி மியூசிக்’ எனும் இசை நிறுவனத்தைத் தொடங்குகிறேன். நான் இசையை உருவாக்கும்போதும், கேட்கும்போதும் என்ன மாதிரியான ஆன்மீக உணர்வினை அடைகிறேனோ அதை ரசிகர்களான நீங்களும் அடைய வாழ்த்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.
நடிகை அதிதி ராவ் ஹைதரி, பாடகி நீதி மோகன், பாடகர் ஹரிஹரன் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சமீபத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் எஞ்சாயி எஞ்சாமி பாடலுக்கு வருவாய் என எதுவுமே வரவில்லை எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.