
சுல்தான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் பள்ளி மாணவியை பின் தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வந்தவர்கள், உச்ச கட்டமாக அவளது தலையில் மோட்டார் பைக்கை ஏற்றிக் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயதுப் பள்ளி மாணவி ஒருவருக்குத்தான் இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளது. கடந்த 8-ஆம் தேதியன்று அவர் பள்ளி முடிந்து திரும்பிக் கொண்டிருக்கும் போது கயவர்கள் லர் அவரை வழிமறித்துக் கிண்டல் கேலி செய்துள்ளனர். அம்மாணவி எழுப்பிய குரல் கேட்டு அங்கு அருகில் உள்ள பொது மக்கள் திரளவே, அவர்கள் தப்பிச்சென்று விட்டனர்.
ஆனால் சிறிது நேரம் கழித்து அவர்கள் மீண்டும் அந்தப் பெண்ணைத் தேடி வந்துள்ளார்கள். மீண்டும் அவரை கேலியும் கிண்டலும் செய்து ஆபாச வார்த்தைகளால் விமர்சித்துள்ளனர்.. அவர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மீண்டும் சப்தம் எழுப்ப முயற்சிக்க, அவர்கள் அந்தப் பெண்ணை தரையோடு சேர்த்து அழுத்திப் பிடித்துக் கொன்டு, அவள் தலையில் மோட்டார் பைக்கை ஏற்றி இறக்கியுள்ளனர். இதில் அப்பெண்ணின் மண்டையோடு கடுமையாக சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட பெண்ணின் தாத்தா அருகில் உள்ள லம்ப்ஹுவா காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் அங்கு எப்.ஐ.ஆர் எதுவும் பதியப்படவில்லை. இதனால் முறையான போலீஸ் புகார் இல்லாத காரணத்தால் லக்னௌவில் உள்ள கே.ஜி.எம்.யு மருத்துவமனையிலும் அவளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்து விட்டனர். இறுதியில் போராட்டத்திற்குப் பிறகு சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 11-ஆம் தேதியன்று எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் கடந்த 14-ஆம் தேதியன்று மரணமடைந்து விட்டார்.
தற்போது சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்டமாக லம்ப்ஹுவா காவல் நிலைய ஆய்வாளர் சஞ்சய் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.