திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 57 வயதான நபர் அங்கு திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது:
திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கழிவறையில் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு இறந்தார். கரோனா தொற்று காரணமாக அவர் கடந்த வியாழக்கிழமை கிசிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடுமையான கணைய அழற்சி நோயும் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால் ஏற்பட்ட கடுமையான வலி காரணமாக ஸ்ரீநிவாசன் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். எனினும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் கரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 2 நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.