உத்தரப் பிரதேசத்தில் அதிக அளவு மதுபானம் அருந்துவதாக நண்பர்களிடையே விளையாட்டாக நடைபெற்ற போட்டி விபரீதத்தில் முடிந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் நண்பர்களிடையே விநோதமான போட்டி ஒன்று நடைபெற்றுள்ளது. ஆக்ராவைச் சேர்ந்த ஜெய் சிங், தனது நண்பர்களான கேஷவ், போலா ஆகியோருடன் மது அருந்தச் சென்றுள்ளார்.
அப்போது நண்பர்கள் இருவரும் போட்டி ஒன்றை வைத்துள்ளனர். அதாவது, 10 நிமிடங்களில் 3 பாட்டில் மதுவை (நாட்டுச் சாராயம்) அருந்த வேண்டும் என போட்டி ஒன்றை வைத்துள்ளனர்.
இந்த போட்டியை ஏற்றுக்கொள்வதாகவும், தோல்வியடைந்தால், மதுபானத்துக்கான செலவை ஏற்றுக்கொள்வதாகவும் ஜெய் சிங் தெரித்து மதுபானத்தை அருந்தியுள்ளார்.
அதிக மது அருந்தியதன் காரணமாக நிலைத்தடுமாறிய ஜெய் சிங், ஷில்ப்கிராம் என்ற பகுதியில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். இதனை அவரின் 16 வயது மகன் அறிந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளான். எனினும் மதுபோதையில் இருந்ததால், சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து வேறு மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது, ஜெய் சிங் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, நண்பர்களான கேஷவ், போலா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.