ஸ்ரீதர் வேம்புவின் பழைய சோறு பதிவுக்கு குவியும் பாராட்டு

பழைய சோறு மாறிவிட்டதாக சோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு டிவிட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், பலரும் அதற்கு நன்றிகளை தெரிவித்து வருகிறார்கள்.
ஸ்ரீதர் வேம்பு (கோப்பிலிருந்து)
ஸ்ரீதர் வேம்பு (கோப்பிலிருந்து)

தனது காலை உணவாக நம் மூதாதையரின் அருமருந்தான பழைய சோறு மாறிவிட்டதாக சோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு டிவிட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், பலரும் அதற்கு நன்றிகளை தெரிவித்து வருகிறார்கள்.

தாங்கள் மறந்திருந்த பழைய சோறு பற்றி நினைவூட்டியதற்கு நன்றி என்றும், தங்களுக்கு இருக்கும் பல வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு இது தீர்வை தரும் என்றும் பல முக்கிய பிரபலங்கள் உள்பட ஏராளமானோர் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

இதனோடு சேர்ந்து, பழைய சோறு முறைக்கு நிகராக, பல்வேறு மாநிலங்களில் இருக்கும் தண்ணி சாதம், வடிக்காத சாதம் போன்ற உணவுப் பண்டங்களைப் பற்றியும் மக்கள் தகவல்களை பகிர்ந்துள்ளனர். ஒடிசா உணவு, மேற்கு வங்க உணவு பற்றியெல்லாம் இங்கே பகிரப்பட்டு, தமிழர்கள் சிறிது காலமாக கொண்டாட மறந்துபோன உணவான பழைய சோறுக்கு மீண்டும் மவுசு ஏற்படும் வகையில் கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஸ்ரீதர் வேம்புவின் பதிவு
எரிச்சலுடன் குடல் பிரச்னை என்ற ஐபிஎஸ் நோயால் பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளும் நிலையில், அந்நோய்க்கு எளிதான மருந்தாக பழைய சோறு இருக்கும் என்று ஸ்ரீதர் வேம்பு பதிவில் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்ல, தனக்கு இந்நோய் பாதிப்பு இருந்ததாகவும், பழைய சோறு எனும் மாமருந்தால் நோய் குணமானதாகவும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பதிவு உதவலாம் என்று இங்கே பகிர்ந்திருப்பதாகவும் ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார்.

அவர் டிவிட்டரில் வெளியிட்டிருக்கும் பதிவில், சில ஆண்டுகாலமாக எனது காலை உணவாக பழைய சோறு மாறியிருக்கிறது. எனது பாம்பரிய முறையில் இந்த உணவை நான் எடுத்துக் கொண்டுள்ளேன். எனக்கு பல காலணமாக எரிச்சலுடன் குடல் பிரச்னை (இர்ரிடபிள் பவுள் சின்ட்ரோம் -ஐபிஎஸ்) நோய் இருந்தது.  ஆனால் அந்த நோய் தற்போது குணமடைந்துவிட்டது. பல ஒவ்வாமைகளும் இருந்தன. அவைகளும் இல்லை. ஒருவேளை இந்த பதிவு சிலருக்கு உதவலாம் என்று பதிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவுக்கு பலரும், தங்களுக்கும் இந்த நோய் இருப்பதாகவும், இந்த பதிவு உதவும் என்று கூறி நன்றி தெரிவித்துள்ளனர். சிலர், பழைய சோறு எப்படி செய்வது என்று டிப்ஸ் கேட்டுள்ளனர்.  சிலர் பழைய சோறு எப்படி செய்வது என்பது குறித்த விடியோக்களை இணைத்திருக்கிறார்கள்.

இந்தியாவைச் சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபரும், சோஹோ நிறுவனத் தலைவருமான ஸ்ரீதர் வேம்பு, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்திய பணக்காரர்களில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிப்பவர்.

உயர்கல்வி பெறாத கிராமப்புற மாணவர்களுக்காக தொழில்சார் மென்பொருள் மேம்பாட்டுக் கல்விக்காக சோஹோ பள்ளிகளை நிறுவியவர் ஸ்ரீதர் வேம்பு. இவருடைய சோஹோ மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 20 சதவீதம் பேர் கல்லூரிகளில் பட்டம் பெறாத இளைஞர், இளைஞிகள்.

ஸ்ரீதர் வேம்பு குறிப்பிடும் ஐபிஎஸ் என்றால்?

இரிட்டபுள் பவுல் சிண்ட்ரோம் என்பது, வயிற்றின் குடல் பகுதியில் ஏற்படும் பிரச்னை. இது ஒரு நோய் அல்ல என்கிறார்கள் மருத்துவர்கள். சிலருக்கு பதற்றம், கோபம், மன அழுத்தம் போன்றவை ஏற்பட்டதும் அடிவயிற்றில் வலி, வயிற்று உப்புசம், மந்தநிலை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, சாப்பிட்டதும் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். 

மனநிலை காரணமாகவே இந்த பிரச்னை ஏற்படுகிறது என்பதாலும், இது ஒரு நோயே அல்ல என்பதாலும் அப்படியே விட்டுவிட முடியாது. தேர்வெழுத, நேர்காணலுக்கு செல்லும் போதுகூட இந்த பிரச்னை ஏற்படலாம். இது ஏன், யாருக்கு ஏற்படும் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. சிலர் எப்போதும் ஏதோ ஒரு விஷயத்துக்குத் தொடர்ந்து பயந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு இது வரலாம். இது மட்டும்தான் தற்போதைக்கு இந்த நோயைப் பற்றி அறிந்த தகவல். 

எந்த வயதினருக்கும் இந்தப் பிரச்னை வரக்கூடும். இதனை அலட்சியப்படுத்தாமல் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் என்றே கூறப்படுகிறது.

சிலருக்கு இது வாழ்நாள் முழுவதும் தொடர்கதையாகிவிடுகிறது. இதந்த பிரச்னையால் பலரும் வெளியே செல்லவே பயப்படுவார்கள். இந்த நிலையில்தான், பழைய சோறு இந்த நோய்க்கு மாமருந்தாக உள்ளதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இதற்கு நன்றியும் பாராட்டும் குவிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com