சுகம் தரும் சித்த மருத்துவம்: ஆறாத புண்களையும் ஆற்றும் ‘யோசனவல்லி’ 

சித்த மருத்துவத்தில் வல்லாரை கொண்டு செய்யப்படும் வல்லாரை நெய் பிரசித்தி பெற்றது. மேற்கூறிய நோய்களுக்கு நல்ல பலனை தரும். நரம்புகளுக்கு வன்மை தரும். மூளையும் பலப்படும். குழந்தைகளுக்கும் இதை கொடுக்கலாம்.
வல்லாரை கீரை
வல்லாரை கீரை

புண் என்று வந்தாலே பலருக்கும் பயம் தான். அதுவும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு புண் வந்தால் இன்னும் கவலைதான். டாக்டரிடம் சென்று அடிக்கடி புண் வருகிறது என்று சொன்னால் முதலில் சர்க்கரை பரிசோதனை செய்துவிட்டு வாங்க என்பது தான் அவரது பதிலாக இருக்கும். 

அன்கன்ட்ரோல்டு டயாபடீஸ் எனப்படும் கட்டுப்படாத நீரிழிவு உள்ளவர்களுக்கு புண் வந்தால் ஆறுவது மிகக் கடினம். “டாக்டர் எனக்கு பல மாதங்களாக புண் இருக்கு. நானும் மருத்துவர் ஆலோசனைப்படி ஆன்டிபயாடிக் பல மாதங்களாக போட்டுக்கிட்டே தான் இருக்கேன். ஆனாலும் புண் முழுசா ஆறவில்லை. சித்த மருத்துவத்துல புண் ஆற்ற மருந்து இருக்கா?” என்று சித்த மருத்துவரை அணுக நினைப்பவர்களுக்கு நிச்சயம் பல மூலிகைகள் புண்ணை ஆற்ற காத்துக்கொண்டுள்ளன என்பது தான் உண்மை. 

அந்த வரிசையில் முதலில் அறிந்துகொள்ள வேண்டியது ‘யோசன வல்லி’ எனப்படும் ‘வல்லாரை கீரை’.

வல்லாரையா..? டாக்டர் அது ஞாபக மறதிக்கு தானே? அது எப்படி புண்ணை ஆற்றும்? என்று காலம் காலமாக ஞாபக சக்திக்கு வல்லாரை என்ற ஒற்றை வாசகத்தை அதன் மீது முத்திரை குத்தி பயன்படுத்திக் கொண்டிருக்கும் பலருக்கும் சொல்லிக்கொள்ள வேண்டியது என்னவெனில், சித்த மருத்துவத்தில் ஒரே மூலிகை பல்வேறு நோய்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ளது. அது சித்தர்களின் மெய்ஞ்ஞானத்திற்கு உதாரணம். அறிவியலுக்கு அப்பாற்பட்ட உண்மையும் கூட. 

ஒவ்வொரு மூலிகையிலும் உள்ள பல்வேறு வேதிப்பொருள்கள் அதன் பல்வேறு மருத்துவ குணங்களுக்கு காரணமாக உள்ளன. அதற்க்கு யோசன வல்லி எனும் வல்லாரையும் மிகப்பெரிய உதாரணம். 

வல்லாரையானது யோசனை செய்ய உதவும் ஞாபக சக்திக்கு உதவுவதால் யோசனவல்லி என்ற பெயரை பெற்றது போலும். வல்லாரையின் பொருள் காரணத்தை தேடினால், வல்லாரை அதாவது வல்லவர்களை, திறமையானவர்களை உருவாக்குவதால் இப்பெயர் வந்தது போல் தெரிகிறது.

நம்ம ஊரில் நீர் நிலைகள் எங்கும் சாதாரணமாக படர்ந்து கிடக்கும் வல்லாரை கீரையால் புண், வாய்ப்புண், குன்மம், கட்டி, கிருமி நோய், சுரம், வயிற்றுநோய், எக்சீமா எனப்படும் தோல் ஒவ்வாமை, சோரியாசிஸ் போன்ற தோல் நோய்கள் பலவற்றிக்கும் நல்ல பலனை அளிக்க கூடியது. குஷ்ட நோய் எனப்படும் தொழுநோயில் வல்லாரை பயன்படுத்தப்பட்டு நல்ல பலனளிப்பதை ஆய்வு முடிவுகள் கூறுகின்றது. 

இத்தகைய சிறப்பு மிக்க வல்லாரையை பயன்படுத்தக்கூறி பக்கத்துக்கு வீட்டில் இருப்பவர்களுக்கும் சொல் என்று தேரையர் குணவாகடம் கூறுகின்றது. இதனை “பக்கத்தில் எல்லாரையும் அருந்தென்றே உரைத்து நன்மனையுள் வல்லாரையை வளர்த்துவை” என்ற வரிகளால் அறியலாம். 

சீன மருத்துவத்தில், இலைகள் நச்சு காய்ச்சல்,பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலுக்கு பரிந்துரைக்கப்படுகின்றது. 

அதேசமயம் தளிர்கள் கட்டிகள் மற்றும் காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. எலும்பு முறிவுகள், காயங்கள் மற்றும் பாம்புக்கடி போன்றவற்றின் சிகிச்சையிலும் வல்லாரை பயன்படுத்தப்படுகிறது.

வல்லாரை கீரையில் உள்ள ட்ரைடர்பீன் சபோனின்கள் மற்றும் சப்போஜெனின்கள் காயம் ஆறுதல் மற்றும் காயம் ஏற்பட்ட இடத்தில் கொலாஜன் இணைப்பு திசுக்களின் உற்பத்தியைத் தடுப்பதன் மூலம் புண்ணை ஆற்ற முக்கிய காரணமாக உள்ளன. 

வல்லாரையில் உள்ள பிற மூலக்கூறுகளான பிரம்மோசைடு மற்றும் பிராமினோசைட் போன்றவை நரம்பு மண்டலத்தின் தளர்வுக்கு காரணமாக உள்ளது. சென்டெல்லாசைடு வேதிப்பொருள் உயர் இரத்த அழுத்த சிகிச்சையில் (சிரை) பயனுள்ளதாக உள்ளன. டானின்கள் (20-25%), பைட்டோஸ்டெரால்கள் (கேம்பெஸ்டெரால், சிட்டோஸ்டெரால், ஸ்டிக்மாஸ்டெரால்), ரெசின்கள், அமினோ அமிலங்கள் (அலனைன், அஸ்பார்டேட், குளுட்டமேட், லைசின் மற்றும் ட்ரெயோனைன்), ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையுள்ள ஃபிளாவனாய்டுகள் , ஹைட்ரோகோடின் என்ற அல்கலாய்டு ,வாலரின் என்ற ஒரு கசப்பான மூலக்கூறு , கொழுப்பு அமிலங்கள் (லினோலிக் அமிலங்கள், லினோல்னெலிக், பால்மிடிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள்) போன்ற பல உடலுக்கு தேவையான அத்தியாவசிய மூலக்கூறுகளின் இயற்கை கலவையாக வல்லாரை கீரை உள்ளது ஆச்சரியத்திற்கு உரியது.

வல்லாரையில் உள்ள வேதிப்பொருள்கள் வீக்கமுறுக்கியாகவும், மன அழுத்தத்தை போக்குவதாகவும், மன பதட்டத்தை குறைப்பதாகவும், ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாகவும், நரம்புகளின் வீக்கத்தை போக்குவதாகவும், வலிப்பு நோயை குறைப்பதாகவும், ரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும், ரத்த குழாய் அடைப்பை தடுப்பதாகவும், அதன் மூலம் மாரடைப்பை தடுப்பதாகவும், கல்லீரல் திசுக்களை பாதுகாப்பதாகவும், வயிற்றுப்புண்ணை (அல்சரை) போக்குவதாகவும்  உள்ளது.  அளவுக்கு அதிகமாக இதை பயன்படுத்த தலைசுற்றல், தலைவலி இவற்றை உண்டாக்கும் என சித்த மருத்துவம் எச்சரிக்கின்றது.

வல்லாரையில் உள்ள ஆசியாட்டிகோசைட், ஆசியாட்டிக் அமிலம் எனும் முக்கியமாக செயல்படும் வேதிப்பொருள்கள் ரெட்டிகுலோ-எண்டோதெலியல் அமைப்பில்  விரைவான செயல்பாட்டைத் தூண்டுவதன் மூலம் எளிதில் புண் ஆற்ற வழிவகை செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றது. 

வல்லாரை கீரையானது இணைப்பு திசுக்களின் கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலமும், பெரிவாஸ்குலர் எனும் ரத்த குழாயின் மேலுறையை மேம்படுத்துவதன் மூலமும், திசு இறுகலை குறைத்து, பாதிக்கப்பட்ட சிறு ரத்த நாளங்கள் வழியாக ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலமும் புண் ஆற வழிவகை செய்கிறது. 

இது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மையும் உள்ளபடியால் நீரிழிவு நோயாளிகளின் புண்ணை ஆற்றுவதிலும் நல்ல பலன் தரக்கூடியது. மேலும் வெரிகோஸ் ரத்த குழாயில் ஏற்படும் புண்களையும் ஆற்ற வல்லது.  மாறாத கீலாய்டு தழும்புகளையும் போக்கக் கூடியது.

சித்த மருத்துவத்தில் வல்லாரை கொண்டு செய்யப்படும் வல்லாரை நெய் பிரசித்தி பெற்றது. மேற்கூறிய நோய்களுக்கு நல்ல பலனை தரும். நரம்புகளுக்கு வன்மை தரும். மூளையும் பலப்படும். குழந்தைகளுக்கும் இதை கொடுக்கலாம்.

ஆகவே ஆறாத புண்ணை ஆற்ற விரும்பும் பலரும், நாள்பட்ட புண்ணால் அவதியுறும் பலரும், வல்லாரை கீரையை உணவாக சமைத்து உண்பதோடு இதன் சூரணத்தை புண்களின் மீது தடவிவர புண்கள் ஆறும். 

இது நம் நாட்டு கீரை வகைகளுள் ஒன்று. பயன்படுத்தி பாருங்கள் நல்ல பலனளிக்கும். பலருக்கும் கூறி பலனடைய செய்வோம். சித்த மருத்துவத்தில் எளிமையே வலிமை.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com