

சென்னை: போகி கொண்டாட்டத்தையொட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பழைய பொருட்களுடன் டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரித்ததால் இன்று புதன்கிழமை (ஜன.14) அதிகாலை பனி மூட்டத்துடன் புகை மூட்டம் சேர்ந்ததால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
பொங்கலை வரவேற்கும் விதமாக, தமிழகத்தின் பல பகுதிகளிலும் "பழையன கழிதலும், புதியன புகுதலுமாக..." வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாக போகிப்பண்டிகையை கொண்டாடினர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்பட்டு வந்த நிலையில், இன்று போகி கொண்டாட்டத்தையொட்டி வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து கொண்டாடினர். இதனால் பனி மூட்டத்துடன் புகை மூட்டமும் சேர்ந்துகொண்டதால், கடுமையான புகை மூட்டம் காரணமாக சாலைகளில் வருபவர்கள், வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை போட்டவாறு வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.
சென்னை பெருங்குடி, வேளச்சேரி, ராயபுரம் மற்றும் வடபழனி பகுதிகளில் கடுமையான பனி மற்றும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
காற்று மாசு சராசரி அளவில் உயர்வு
சென்னையில் பழைய பொருட்களை எரிப்பதன் மூலம் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு சராசரி அளிவில் இருந்து உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் காலை 7 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டி - 196, மணலி - 144, கொடுங்கையூர்- 123, அரும்பாக்கம் - 177, காந்தி நகர்(எண்ணூர்) - 144, பெருங்குடி - 103, வேளச்சேரி - 76, ராயபுரத்தில் - 64 ஆகவும் உள்ளது.
9 விமானங்கள் சேவை ரத்து
போகி பண்டிகையால் மீனம்பாக்கம், கவுல் பஜாா், பொழிச்சலூா், பம்மல் அனகாபுத்தூா் உள்பட சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த குடியிருப்புவாசிகள் பழைய பொருள்களை எரிக்கும்போது ஏற்படும் கடும்புகை மூட்டத்தால், ஓடுபாதை முற்றிலும் மறைக்கப்பட்டுவிடும். இதனால், கடந்த ஆண்டுகளைப் போல, நிகழாண்டும் விமான சேவைகள் பாதிக்கப்படும் என்பதால், முன்னெச்சரிக்கையாக புதன்கிழமை (ஜன.14) அதிகாலை முதல் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 9 விமானங்கள் ரத்து செய்யப்படுவதுடன், சில விமானங்கள் காலதாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு 11.40-க்கு சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமானம், புதன்கிழமை அதிகாலை 3.05-க்கு புணே செல்லும் விமானம், காலை 6.35-க்கு கோவை செல்லும் விமானம், காலை 7.15-க்கு மும்பை செல்லும் விமானம், காலை 8 மணிக்கு தில்லி செல்லும் விமானம் ஆகிய 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் இருந்து புதன்கிழமை அதிகாலை 5.20-க்கு சென்னை வரும் விமானம், காலை 6.35-க்கு மும்பையில் இருந்து வரும் விமானம், காலை 7.10-க்கு புணேயில் இருந்து வரும் விமானம், காலை 9.10-க்கு கோவையிலிருந்து வரும் விமானம் ஆகிய 4 வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து புதன்கிழமை காலை 5.40-க்கு விஜயவாடா செல்ல வேண்டிய விமானம் 3 மணி நேரம் தாமதமாக காலை 8.40-க்கும், காலை 6-க்கு சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானம் 3 மணி நேரம் தாமதமாகவும், காலை 9.05-க்கும் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போகி பண்டிகை காரணமாக மக்கள் வேண்டாத பழைய பொருட்களை எரித்து வருவதால் சென்னை முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.