இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி நேற்று (ஜூன் 6) நியூ சண்டீகரில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 564 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 126 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கே.எல்.ராகுல் 100 ரன்கள், சாய் சுதர்சன் மற்றும் ரிஷப் பந்த் தலா 81 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 52 ரன்கள் எடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது சலீம் சஃபி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரஹ்மான் ஷரிஃபி மற்றும் ஹஸ்மதுல்லா ஷகிதி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியவுடன் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக அனைத்து விக்கெட்டுகளையும் ஆப்கானிஸ்தான் இழந்தது.
அதிகபட்சமாக ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மத் ஷா 60 ரன்கள் எடுத்தார்.
இந்தியாவின் அறிமுக வீரரான மானவ் சுதர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
‘ஃபாலோ-ஆன்’ பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, மூன்றாம் நாள் மதிய உணவு இடைவேளையின் போது, விக்கெட்டுகள் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்துள்ளது.
Summary
Manav Suthar shines : Afghanistan bowled out for 152 in the first innings
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










