ஐபிஎல்: மைதானங்களில் 50% ரசிகர்களுக்கு அனுமதி

கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் ஐபிஎல் போட்டியில் 50% ரசிகர்களுக்கு அனுமதி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
ஐபிஎல்: மைதானங்களில் 50% ரசிகர்களுக்கு அனுமதி

மஹாராஷ்டிரத்தில் கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் ஐபிஎல் போட்டியில் 50% ரசிகர்களுக்கு அனுமதி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் 2022 போட்டி மார்ச் 26-ல் தொடங்கி மே 29 அன்று நிறைவுபெறவுள்ளது. 70 லீக் ஆட்டங்கள் மஹாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, புணேவில் நடைபெறுகின்றன. 10 அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாடவுள்ளன. 10 அணிகளும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் விளையாடவுள்ளன. குரூப் ஏ-வில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், தில்லி, லக்னெள ஆகிய அணிகளும் குரூப் பி-வில் சென்னை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. சிஎஸ்கே அணி - மும்பை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது. (2022 ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைந்துள்ளன.)

இந்தியா முழுக்க கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் மஹாராஷ்டிரத்தில் நடைபெறும் ஐபிஎல் 2022 போட்டிக்கு 25% ரசிகர்களை அனுமதிக்க முதலில் முடிவு செய்யப்பட்டது. ஏப்ரல் 15 வரை 25% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும், அதன்பிறகு கரோனா பரவலின் பாதிப்பைக் கொண்டு கூடுதல் ரசிகர்களுக்கு அனுமதி வழங்க பிசிசிஐயும் மஹாராஷ்டிர அரசும் முடிவு செய்யும் என அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக வெகுவாக குறைந்து வரும்நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று மஹாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. மஹாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஏப்ரல் 2 முதல் கட்டாய முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ராஜேஷ் டோப்பே தெரிவித்தாா்.

மஹாராஷ்டிரத்தில்  கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் ஐபிஎல் போட்டியில் 50% ரசிகர்களுக்கு அனுமதி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிக்காக டிக்கெட்டுகளைப் பதிவு செய்யும் இணையத்தளமான புக்மை ஷோ நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

மைதானங்களில் 50% ரசிகர்களுக்கு அனுமதி வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியை ஏராளமான ரசிகர்கள் நேரில் காண முடியும் என்று தகவல் தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com