
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் டைட்டன்ஸ் முதலில் விளையாடியது.
சாய் சுதர்சன், ஷுப்மன் கில் அரைசதம்
முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்சன் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் அதிரடியாக விளையாடினர்.
அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். ஷுப்மன் கில் 38 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். சாய் சுதர்சன் 37 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
அதன் பின் களமிறங்கிய வீரர்களில் ஜோஸ் பட்லர் (16 ரன்கள்), வாஷிங்டன் சுந்தர் (2 ரன்கள்), ஷெர்ஃபேன் ரூதர்போர்டு (22 ரன்கள்), ராகுல் திவாட்டியா (0 ரன்) எடுத்து ஆட்டமிழந்தனர். லக்னௌ தரப்பில் ஷர்துல் தாக்குர் மற்றும் ரவி பிஷ்னோய் தலா இரண்டு விக்கெட்டுகளையும், திக்வேஷ் சிங் ரதி மற்றும் ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் விளையாடி வருகிறது.