இந்திய அணி கேப்டன் விராட் கோலி மீது எந்தவொரு வீரரும் புகார் அளிக்கவில்லை என பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் சில முடிவுகளை ஏற்றுக்கொள்ளாத மூத்த வீரர்கள் சிலர், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் புகார் அளித்ததாகச் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இதனை மறுத்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஊடகங்கள் இதுபோன்ற அபத்தங்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும். எந்தவொரு இந்திய கிரிக்கெட் வீரரும் பிசிசிஐயிடம் புகார் அளிக்கவில்லை. ஒவ்வொருமுறையும் வெளியாகும் தவறான செய்திகளுக்கு பிசிசிஐ விளக்கம் அளித்துக்கொண்டிருக்க முடியாது என்றார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை வகித்தது. 5-வது டெஸ்ட் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்திய அணியில் கரோனா பரவல் ஏற்பட்ட சூழலில், தொடர்ந்து விளையாட இந்திய வீரர்கள் மறுத்தார்கள். இதனால் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் ஒப்புதலுடன் கடைசி டெஸ்ட் ரத்து செய்யப்பட்டது. அந்த டெஸ்ட் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது.