ரஷித் கானின் பந்துவீச்சு அச்சுறுத்தலை வெற்றிகரமாக முறியடித்துவிட்டதாக நியூசிலாந்து அணியின் கிளன் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (அக்டோபர் 19) நடைபெற்றப் போட்டியில் நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்துக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 71 ரன்கள் எடுத்தார். அவருக்கு ஆட்டநாயன் விருதும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ரஷித் கானின் பந்துவீச்சு அச்சுறுத்தலை வெற்றிகரமாக முறியடித்துவிட்டதாக நியூசிலாந்து அணியின் கிளன் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிளன் பிலிப்ஸ் பேசியதாவது: ரஷித் கானின் பந்துவீச்சை எதிர்கொள்ள நாங்கள் ஒவ்வொருவரும் எங்களால் முடிந்த அளவுக்கு சிறந்த திட்டத்தைத் தீட்டினோம். சில நேரங்களில் போட்டி அவருக்கு சாதகமான நாளாக மாறிவிடும். எவ்வளவு திட்டங்கள் தீட்டினாலும் அவரது நம்பமுடியாத அசாத்திய பந்துவீச்சினால் பேட்ஸ்மேன்களை திணறடிப்பார். அவரது பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக விளையாடிவிட்டால், மற்ற பந்துவீச்சாளர்களை எதிர்த்து சிறப்பாக விளையாடலாம். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பந்துவீசக் கூடியவர்கள். ரஷித் கான் இன்று நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக பந்துவீசினார். இருப்பினும், அவரது பந்துவீச்சு அச்சுறுத்தலை வெற்றிகரமாக நாங்கள் முறியடித்துவிட்டோம் என நம்புகிறேன் என்றார்.
இதையும் படிக்க: அந்தரங்க நினைவுகள்! இரு நூல்களை எழுதுகிறார் செரீனா வில்லியம்ஸ்!
நியூசிலாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டியில் 10 ஓவர்கள் வீசிய ரஷித் கான் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.