ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் 1893.7 புள்ளிகள் பெற்று இந்தியா தங்கம் வென்றுள்ளது. இந்திய வீரர்கள் திவ்யான்ஷ் சிங் பன்வார், ருத்ரன்காஷ் பாட்டீல், ஐஸ்வரி பிரதாப்சிங் தோமர் ஆகியோர் அடங்கிய குழு தங்கம் வென்றது.
1890.1 புள்ளிகளுடன் தென் கொரியா வெள்ளிப் பதக்கத்தையும் சீனா 1888.2 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் தக்க வைத்தது. இதேபோல் துடுப்பு போட்டியிலும் இந்தியாவுக்கு இன்று பதக்கம் கிடைத்துள்ளது.
நால்வர் துடுப்பு படகுப் போட்டியில் ஜஸ்விந்தர் சிங், பீம்சிங், புனித்குமார்,
ஆஷிஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் வெண்கலப் பதக்கம் வென்றனர். இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் வென்று இந்திய அணி பதக்கப் பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது.