இங்கிலாந்தின் பேஷ்பால் யுக்தி இந்திய ஆடுகளங்களில் வேலை செய்யவில்லை எனவும், சொந்த மண்ணில் இந்திய அணியை அசைக்க முடியவில்லை எனவும் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கிய பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, அதன் பின் இந்திய அணியிடம் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. முதல் போட்டியில் தோல்வியடைந்தபோதிலும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அதன் பின் இங்கிலாந்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்தின் பேஷ்பால் யுக்தி இந்திய ஆடுகளங்களில் வேலை செய்யவில்லை எனவும், சொந்த மண்ணில் இந்திய அணியை அசைக்க முடியவில்லை எனவும் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டிக்குப் பிறகு பென் ஸ்டோக்ஸ் பேசியதாவது: இந்திய அணியை நான் வியந்து பார்க்கிறேன். சொந்த மண்ணில் அவர்கள் மிகவும் அசைக்க முடியாதவர்களாக உள்ளனர். சில இந்திய வீரர்கள் இந்தத் தொடரில் இடம்பெறவில்லை. ஆனால், இந்தத் தொடர் இந்திய கிரிக்கெட் எந்த அளவுக்கு ஆழமாக உள்ளது என்பதைக் காட்டியது.
இந்திய அணியின் இளம் வீரர்கள் மிக அற்புதமாக விளையாடினார்கள். இந்த டெஸ்ட் தொடர் தோல்வி எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. எனக்கு மட்டுமின்றி அணிக்கும் இந்த தொடர் தோல்வி ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. மிகுந்த நம்பிக்கையுடன் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கினோம். ஆனால், எங்களால் நினைத்த முடிவைப் பெற முடியவில்லை என்றார்.