பிசிசிஐ ஒப்பந்தத்தில் இடம்பெறுபவர்களை நானும், ரோஹித் சர்மாவும் முடிவு செய்வதில்லை என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் வெற்றிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது: இந்திய அணியில் இடம்பெறுவதற்கான பட்டியலில் அவர்கள் (இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர்) எப்போதும் இருக்கிறார்கள். யாரும் அணியில் இடம்பெற முடியாது என்பது கிடையாது. உள்ளூர் போட்டிகளில் விளையாடும் அனைவருமே இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேர்வுக் குழுத் தலைவர்களின் கவனத்தைப் பெற வேண்டும்.
பிசிசிஐ-ன் மத்திய ஒப்பந்தத்தில் யார் இடம்பெற வேண்டும் என்பதை நான் முடிவு செய்வதில்லை. ஒப்பந்தம் தொடர்பான முடிவுகளை தேர்வுக்குழுத் தலைவர்களும், இந்திய கிரிக்கெட் வாரியமுமே எடுக்கும். எதன் அடிப்படையில் வீரர்கள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படுகிறார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது. நானும், ரோஹித் சர்மாவும் பிளேயிங் லெவனை மட்டுமே தேர்வு செய்வோம். நாங்கள் பிசிசிஐ ஒப்பந்தம் குறித்து ஒருபோதும் ஆலோசித்தது கிடையாது என்றார்.