திருப்பூரை அடுத்த கோயில்வழி அருகே இரும்புக்கூண்டில் மர நாய் ஒன்று ஞாயிற்றுக்கிழமை சிக்கியது.
திருப்பூர் மாவட்டம், கோயில்வழி அருகிலுள்ள இந்திரா காலனியில் வசிப்பவர் அர்ஜுன்(32). இவரது வீட்டருகில் அதிக அளவில் புதர் மண்டிக் கிடப்பதால் பெருச்சாளிகளின் தொல்லை அதிகமாக இருந்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு வரும் பெருச்சாளிகளைப் பிடிக்க சிறிய அளவிலான இரும்புக் கூண்டை வைத்திருந்தார்.
இதனிடையே உணவு தேடி வந்த மர நாய் ஒன்று அந்தக் கூண்டில் மாட்டியது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது. அரிய வகை விலங்கான மர நாயைக் காண அப்பகுதி மக்கள் அதிக அளவில் கூடினர். இதுகுறித்து அர்ஜுன் தெரிவித்த தகவலின்படி, வனத் துறையினரும், காவல் துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து கூண்டில் சிக்கிய மர நாயைப் பார்வையிட்டனர். பின்னர் வனத் துறையினர் அதை பத்திரமாக மீட்டுச் சென்று ஊதியூர் அருகிலுள்ள வனப் பகுதியில் விடுவித்தனர்.