சேலம்: சேலம் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்குக் கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் பாட்டில் ஒன்றுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இதையும் படிக்க | கபடி வீரர்களுக்கு கழிப்பறையில் பரிமாறப்பட்ட உணவு: விடியோ வைரல்
ஒவ்வொரு பாட்டிலுக்கும் தல பத்து ரூபாய் கட்டாயமாக கேட்டு வசூலிக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் அதனை அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் தருவதற்கு வசூலிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனைக் கண்டித்து மதுப்பிரியர்கள் திடீரென கடை முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தினந்தோறும் கூலி வேலைக்கு சென்று ஐநூறு ரூபாய் கூலி பெற்றுக் கொண்டு அதில் சிறு தொகையை மது அருந்த வந்தால் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதாகும், இதுகுறித்து விளக்கம் கேட்டால், அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் தருவதற்காக வசூலிப்பதாகவும் யார் இடம் வேண்டுமென்றாலும் புகார் தெரிவிக்கலாம் எனும் அலட்சியத்துடன் பதில் அளிப்பதாக ஊழியர்கள் மீது குற்றம்சாட்டி உள்ளனர்.
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மதுப் பிரியர்கள் ஆவேசத்துடன், அன்றாட கூலி வேலை செய்யும் தங்களிடம் தினமும் பத்து ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாகவும், இதே போல சேலத்தில் உள்ள அனைத்துக் கடைகளிலும் ஊழியர்கள் கூடுதல் பணம் வசூலித்து கொள்ளையடிப்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினர்.
எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு அரசு நிர்ணயம் செய்த விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். மதுப் பிரியர்கள், டாஸ்மாக் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.