எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 36-வது நினைவுதினம் இன்று (டிச.24) அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படிக்க | ஆழிப்பேரலையில் அழிந்த தனுஷ்கோடி: இன்று 59-ஆவது ஆண்டு நினைவு நாள்
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஏழை எளிய மக்களின் வலிகள் அறிந்து வளர்ச்சி திட்டங்கள் வகுத்த தன்னலமற்ற தனித் தலைவர், என்றும் கோடிக்கணக்கான தமிழக மக்கள் நெஞ்சங்களில் வாழும் எம்.ஜி.ஆர். அவர்கள் வகுத்து தந்த பாதையின் வழிநடந்து, அவரின் நினைவு நாளில் அவர்தம் பெரும் புகழைப் போற்றுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, வளர்மதி, திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.