பொன்னேரி: பொன்னேரியில் ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து சங்க வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பொன்னேரியில் கோட்டாட்சியர். வட்டாட்சியர் அலுவலகம் 20-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன.
மேலும் பொன்னேரி நகராட்சியில் உள்ள ஹரிஹரன் கடைவீதி, தேரடி வீதி, திருவாயர்பாடி, வேண்பாக்கம், சின்னக்காவனம், தாயுமான் செட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் அரிசி, மளிகை, காய்கறி, தேநீர் கடை என 700-க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன.
இப்பகுதியில் உள்ள பெட்டிக் கடைகள், முட்டைக் கடை, உணவகம், இனிப்பகம், பால் மற்றும் தேநீர் கடைகளில் அவ்வப்போது ரெளடிகள் பணம் கொடுக்காமால் பொருள்கள் கேட்பதாகவும், வியாபாரிகள் பொருள்கள் தரமறுத்தால் அவர்களின் கடைகளை அடித்து உடைத்து கத்தியை காட்டி மிரட்டி தாக்கி விட்டு செல்வதாக கூறப்படுகிறது.
மேலும் ஹரிஹரன் கடைவீதி, தேரடி வீதியில் உள்ள இரண்டு கைப்பேசி கடைகளின் பூட்டை உடைத்து கைப்பேசிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் பொன்னேரி நகராட்சி பகுதியில் தொடர்ந்து கடைகளை அடித்து, வியாபாரிகளை தாக்குபவர்கள் குறித்து பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தால் அதன் மீது எந்த நடவடிக்கையும் மேற்
கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, பொன்னேரியில் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், அவர்களை தாக்கிய ரெளடிகளை கைது செய்யக் கோரி 700-க்கும் மேற்பட்ட கடைகளை மூடி வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: மருத்துவப் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது!
முன்னதாக கடை அடைப்பு போராட்டத்தை கைவிட காவல் துறையினர் திங்கள்கிழமை வியாபாரிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.