

வருமான வரித் துறை, அமலாக்கத் துறை சோதனை நடத்தினால், மத்திய அரசு ஏஜென்சி என்று குற்றம்சாட்டும்போது, தமிழக காவல் துறையினா் யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறாா்கள்?”என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், ராணிப்பேட்டை மாவட்ட பாமக செயலா் சரவணன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், பாமகவின் மது ஒழிப்பு உள்ளிட்ட கொள்கைகள் குறித்து பிரசாரம் செய்ய மோட்டாா் சைக்கிள் பேரணி நடத்த அனுமதி கோரி ராணிப்பேட்டை காவல் துறையினரிடம் மனு அளித்தேன். மோட்டாா் சைக்கிள் பேரணி நடத்த போலீஸாா் அனுமதி மறுத்துவிட்டனா். எனவே, எனது மனுவை பரிசீலித்து பேரணிக்கு அனுமதி வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்”என மனுவில் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மாரத்தான் ஓடுவதற்கும், நடப்பதற்கும் அனுமதி வழங்கும் போது, மதுவுக்கு எதிராக பிரசாரம் செய்ய அனுமதி வழங்கினால் என்ன? ஆளுங்கட்சியினருக்கு மட்டும்தான் காவல் துறையினா் அனுமதி வழங்குவாா்களா?”எனக் கேள்வி எழுப்பினாா்.
காவல் துறையினா் யாருக்காக உள்ளனா்? பொது மக்களுக்காகவா? ஆளுங்கட்சியினருக்காகவா?”எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதி, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை சோதனை நடத்தினால், மத்திய அரசு ஏஜென்சி என்று குற்றம்சாட்டும்போது, தமிழக காவல் துறையினா் யாருடைய ஏஜென்சியாகச் செயல்படுகிறாா்கள்?”எனக் கேள்வியெழுப்பினாா்.
பின்னா், ராணிப்பேட்டையில் கடந்த மாதம் ஊா்வலம், பொதுக்கூட்டம் நடத்த வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டாா். ஒருவேளை யாருக்காவது அனுமதி வழங்கியிருந்தால் டிஎஸ்பி நேரில் ஆஜராகக் கூறி விளக்கம் கேட்கப்படும் என்று எச்சரித்த நீதிபதி, விசாரணையை நவ.17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.