விஜயபாஸ்கர் வீட்டில் 7 மணி நேரமாக தொடரும் அமலாக்கத் துறை சோதனை!
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கரின் சொந்த ஊரான இலுப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த ஏழு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
விஜயபாஸ்கருக்கு சொந்தமாக இலுப்பூர் சௌராஷ்டிரா தெருவில் வீடு, இலுப்பூர் அருகே உள்ள ஓலைமான் பட்டியில் தோட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள திருவேங்கை வாசலில் கல்குவாரி, இலுப்பூரில் ராசி தங்கும் விடுதி ஆகிய பல்வேறு வகையான அசையும் சொத்துக்கள் அசையா சொத்துக்கள் உள்ளன.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் இலுப்பூர் சௌராஷ்டிரா தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு மூன்று கார்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 பேர் கொண்ட குழு வந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது விஜயபாஸ்கர் சென்னை இல்லத்தில் உள்ளார். வீட்டில் அவரது தந்தை சின்னத்தம்பி மற்றும் தாய் அம்மா கண்ணு மட்டும் உள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
விஜயபாஸ்கர் ஏற்கனவே அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஆர் கே நகர் தேர்தல் பண பட்டுவாடா, குட்கா முறைகேடு போன்ற விவகாரங்களில் அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அந்த பண மோசடி புகார்களின் அடிப்படையிலேயே தற்போது அவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் அவருக்கு சொந்தமான திருவேங்கை வாசலில் உள்ள கல்குவாரிகளில் அரசு அனுமதித்த அளவைவிட அதிகப்படியான கற்கள் வெட்டி எடுத்ததாக கூறப்படும் நிலையில் அவரது குவாரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் அந்த சோதனையின் தொடர்ச்சியாகவும்தான் அமலாக்க துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

