

புதுதில்லி: ஜப்பானிய வாகன உற்பத்தி தொழில்துறையில் முன்னோடிகளான டொயோட்டா மற்றும் ஹோண்டா நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்களுக்கு பல ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்காத நிலையில், தற்போது மிகப்பெரிய ஊதிய உயர்வை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, ஜப்பானின் பணவீக்க விகிதம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதன் அதிகபட்ச அளவைத் தொட்டது. அதே வேளையில் ஒவ்வொரு ஆண்டும், ஜப்பானிய நிறுவனங்கள் மார்ச் மாதத்தின் இடையே தங்கள் முடிவுகளை அறிவிப்பதற்கு முன் தொழிற்சங்கங்களுடன் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தைகளை நடத்தும்.
டொயோட்டா நிறுவனத்தின் தலைவராக பதவியேற்கவுள்ள கோஜி சாடோ, இந்த நடவடிக்கை ஜப்பானின் மோட்டார் தொழில்துறை முழுவதும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார். மேலும், ஒவ்வொரு நிறுவனத்திலும் தொழிலாளர் மற்றும் நிர்வாகத்திற்கு இடையே வெளிப்படையான விவாதங்களுக்கு வழிவகுக்கும் என்று நம்புவதாகக் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் போட்டி கார் தயாரிப்பாளரான ஹோண்டா நிறுவனமும், ஊதிய உயர்வு மற்றும் போனஸ் தொடர்பான தொழிற்சங்க கோரிக்கைகளுக்கு பதிலளித்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. ஆரம்ப ஊதியம் அதிகரிக்கப்படுவதால் பெரும்பாலும் இளம் ஊழியர்களுக்கு கூடுதல் தொகை விநியோகிக்கப்படும் என ஹோண்டா தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, விலைவாசி உயர்வால் போராடும் மக்களுக்கு உதவ ஊதியத்தை உயர்த்துமாறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.