காஷ்மீர் படையெடுப்புக்கு பாகிஸ்தானே பொறுப்பு

இன்றைய பிரார்த்தனைப் பிரசங்கத்தில் காஷ்மீர் நிலைமை பற்றி மகாத்மா காந்தி பேசியதாவது:  
காஷ்மீர் படையெடுப்புக்கு பாகிஸ்தானே பொறுப்பு
Published on
Updated on
1 min read

இன்றைய பிரார்த்தனைப் பிரசங்கத்தில் காஷ்மீர் நிலைமை பற்றி மகாத்மா காந்தி பேசியதாவது:    

காலஞ்சென்ற ஸ்ரீ சுபாஷ் போஸின் திறமையான தலைமையின் மீது தீரமாகப் போராடிய இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த இரு மாஜி அதிகாரிகள் காஷ்மீர் கொள்ளைக் கூட்டத்தினருக்கு தலைமை தாங்கி நடத்துகிறார்கள் என்பதை அறிந்து வருந்துகிறேன். கிராமங்களைச் சூறையாடி சுட்டெரிப்பதிலும் 

நிரபராதிகளான ஆண் பெண்களைக் கொலை செய்வதிலும் அவர்கள் ஏன் பங்கெடுத்துக்கொள்கிறார்கள் என்பது புரியவில்லை. செய்யத்தகாத செயல்களைச் செய்ய ஆப்ரிதிகளுக்கும் மற்ற மலைஜாதியினருக்கும் ஊக்கமளிப்பதன் மூலம் அவர்களுக்கு இந்த அதிகாரிகள் கெடுதி செய்கிறார்கள்.இத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் சர்க்கார் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஊக்கமளிக்கிறது என்ற முடிவுக்கே நான் வந்திருக்கிறேன். தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதம மந்திரி பகிரங்கமாக ஊக்கமளித்ததாகக் கூறப்படுகிறது. உதவி புரியுமாறு இஸ்லாமிய உலகுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 

காஷ்மீருக்கு உதவி அளித்தது பண்டித நேரு சர்க்காரின் மோசடி வேலையென்றும், சில காலமாக நடந்த சூழ்ச்சியின் விளைவாகவே காஷ்மீர் (இந்தியாவுடன்) சேர்ந்ததென்றும் குற்றஞ்சாட்டப் பட்டிருப்பதைப் பத்திரிகையில் பார்த்தேன். சகோதர டொமினின் சர்க்கார் மீது பாகிஸ்தான் மந்திரி ஒருவர் இத்தகைய அபாண்டம் கூறியதைக் கேட்டு நான் பிரமித்துப் போனேன்.

பரந்த அளவில் ஜனப் பரிவர்த்தனை நடப்பதைத் தடுக்க முடியாதா என்று சில முஸ்லிம் நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள். இத்தகைய பிரம்மாண்டமான ஜனப் பரிவர்த்தனையைச் சமாளிப்பது எந்த சர்க்காராலும் முடியாத காரியம்தான். சந்தேகப்படுவதையும், முன்பின் யோசிக்காமல் குற்றஞ்சாட்டுவதையும் அடியோடு மனப் பூர்வமாக கைவிட்டால் ஜனப் பரிவர்த்தனையை நிறுத்த முடியும். 

தினமணி (03-11-1947)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com