அதம்பார் ஸ்ரீகோதண்ட ராமன் திருக்கோயில் நன்னிலம் தாலுக்கா, பூந்தோட்டத்திற்கு அருகிலும், கடகம்பாடிக்கு தெற்கில் 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்கே ஐராவதம் எனும் யானை கோதண்டராமரைப் பூசித்ததால் இக்கிராமத்திற்கு "வெள்ளை அதம்பார்' என மற்றொரு பெயரும் உண்டு. "அடம்பர்' என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது.
ராமபிரான் ராவணனுடன் போர் புரிந்து அவனைக் கொன்ற பிறகு இத்தலத்தின் வழி வந்தார். அப்போது புஷ்பக விமானத்தில் இருந்தவாறே ராமபிரானிடம் சீதை, "கௌசிகன் வேள்வி காக்க ராஜா தசரதனால் பணிக்கப்பெற்ற தாங்கள் ஸ்ரீசுந்தர விமானத்துடன் கூடிய இந்த திவ்ய úக்ஷத்திரத்திற்கு எழுந்தருளினீர்கள். அப்போது இந்த úக்ஷத்திரம் தாடகையின் பொறுப்பில் ஒரு பெரிய கானகமாகக் காட்சி கொடுத்தது. அதுவே தற்போது பெருநகரமாக விளங்குகிறது போலும். இதை அறிந்து செல்வோம்'' என்று கூறினாள்.
அதன்படி ராமனும் சீதையும் இத்தலத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் வருகை தந்தனர். ஆகையால் இத்தலத்தில் அனுமன் பணிவிடையை ஏற்று ராமன் - சீதை - லட்சுமணன் ஆகியோர் அருள்பாலித்து வருகின்றனர். இதைக் குறிச்சி தல புராணம் கூறுகிறது.
"வந்தெதிர்ந்த தாடகை தன்னுரத்தைக் கீறி
வருகுருதி பொழிதர வன்கணையொன்றேவி
மந்திரங்கொல் மறைமுனிவன் வேள்வி காத்து
வல்லரக்கர் உயிருண்ட மைந்தன் காண்மின்''
எனப் பெருமாள் திருமொழியில் (10:2) லவ குசர்கள் இராமாயணத்தை உரைப்பது போன்ற குலசேகராழ்வாரின் மங்களாசாஸனத்தின் வழி அமைந்ததும் ஆகிறது இத்திருத்தலத்தின் பெருமை.
இத்தலத்தில் லட்சுமி நாராயணர், சீதா ஸமேத கோதண்டராமர் ஆகியோர் அருள்புரிகின்றனர். ராமன் மிகுந்த அழகு வாய்ந்தவராக உள்ளார். ராமர் கோயில்கள் என்றால் கும்பகோணம், நீடாமங்கலம், முடிகொண்டான், தில்லைவிளாகம், வடுவூர்(குறிச்சி) ஆகிய திருத்தலங்கள் நம் நினைவிற்கு வரும். இத்திருக்கோயில்களில் உள்ள ராமர்களை எல்லாம் விட அழகனாக நிற்கும் ராமனைக் காண "அடம்பர்' கிராமத்திற்குத்தான் செல்ல வேண்டும்.