ஜூலையில் வந்த தொடர் சோதனை: தொழில்நுட்ப சக்தியால் தக்க பதிலடி கொடுத்த ஜப்பான்
ஜப்பானில் ஒரே ஒரு மாதத்தில் மட்டும் ஏற்பட்ட பல்வேறு இயற்கைப் பேரிடர்களில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.


டோக்யோ: ஜப்பானில் ஒரே ஒரு மாதத்தில் மட்டும் ஏற்பட்ட பல்வேறு இயற்கைப் பேரிடர்களில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
முதலில் கன மழை ரூபத்தில் வந்தது. மழை மழையோடு நிற்குமா? நிற்கவில்லை. மழை அதனைத் தொடர்ந்து பயங்கர வெள்ளம், மேற்கு ஜப்பானில் ஏற்பட்ட நிலச்சரிவு என அடுத்தடுத்த பேரிடர்களில் 220 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் சிக்கிய 9 பேரின் உடல்கள் இன்னமும் கிடைக்கவில்லை. அவர்கள் மரணம் அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
கன மழையைத் தொடர்ந்து வரலாறு காணாத வெயிலும் ஜப்பானைத் தாக்கியது. எப்போதும் இல்லாத அளவுக்கு 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் தாக்கியதில் மட்டும் 116 பேர் பலியாகினர்.

மழை, வெயில் வந்த பிறகும் நிற்கவில்லை இயற்கையின் கோர தாண்டவம். அடுத்து நிலநடுக்கம், எரிமலை சீற்றம், சூறாவளி என தன் கைவசம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் ஜப்பான் மீது வீசியது இயற்கை. எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் என்பதற்காக இயற்கையின் கோரத் தாண்டவம் தொடர்ந்தது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உலகிலேயே மிகப் பணக்கார நாடுகளில் ஒன்றான ஜப்பான் தன்னிடம் இருந்த அனைத்து தொழில்நுட்ப சக்திகளையும் பயன்படுத்தி, நாட்டு மக்களை இயற்கைப் பேரிடரிடம் இருந்து இரும்புக் கரம் கொண்டு காத்தது.
இதோடு நிற்கவில்லை பட்டியல்.. ஆறுகள் கரைபுரண்டு ஓடின. உடனடியாக அதன் கரையோரங்களை மதில்சுவர்கள் எழுப்பியும் கரையோரங்களை உயர்த்தியும் பேரிழப்பில் இருந்து தடுத்தனர் மீட்புப் படையினர்.

அனைத்து பேரிடர்களையும் ஜப்பான் தனது அதிகத் திறன் வாய்ந்த பாதுகாப்புப் படையைப் பயன்படுத்தி வென்றது என்றே இந்த இடத்தில் சொல்ல வேண்டும்.
நிப்பானில் 1982ம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளிக்குப் பிறகு ஜப்பானில் இந்த ஆண்டுதான் அதிகப்படியான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. சுமார் 70 ஆயிரம் படை வீரர்களும், பேரிடர் மீட்புப் படைகளும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தேவையான வசதிகளை செய்துத் தரவும், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கவும் பணியமர்த்தப்பட்டனர்.

ஒரே ஒரு வெள்ளம் வந்தாலே ஓராண்டுகளுக்கு ஒப்பாரி வைக்கும் நாடுகளைப் போல் அல்லாமல், அனைத்துப் பேரிடர்களையும் ஒரே மாதத்தில் சந்தித்தும் இதுவரை கோரத் தாண்டவங்கள் என்ற எந்த புகைப்படங்களையும் வெளியிட்டு, வெளிநாடுகளிடம் கை ஏந்தாலும், உதவியைக் கோராமலும் நின்று சாதிக்கும் ஜப்பான் அனைத்து நாடுகளுக்குமே ஒரு முன் மாதிரி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...