உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் தற்போது பல்வேறு நாடுகளில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கரோனா வைரஸ் தொற்று உலகின் பல முக்கிய பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, உடன் பணியாற்றும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு நபருடன் நான் தொடர்பில் இருந்ததால் சுய தனிமைப்படுத்தலில் உள்ளேன். ஆனால், எனக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை. நலமாக இருக்கிறேன். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தலில் இருக்கிறேன்.
நாம் அனைவரும் சுகாதார வழிகாட்டுதலுடன் இணங்குவது மிகவும் முக்கியமானதாகும். கரோனா பரவுதலை உடைக்க வேண்டும். சக ஊழியர்களும் தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ள வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.