ஐநா மூலம் கோவாக்சின் விநியோகிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக உலக சுகாதார அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்துவரும் பாரத் பயோடெக் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், வசதிகளை மேம்படுத்தவும் குறைபாடுகளை சரி செய்யவும் வலியுறுத்தியுள்ளது.
கோவாக்சின் தடுப்பூசியை பெற்று கொண்டு நாடுகள், முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்படவில்லை.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "ஐநா அமைப்புகள் மூலம் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசியை வாங்கிய நாடுகள் தக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அடுத்த 4 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி செயல்திறன்மிக்கதாக இருப்பதாகவும் பாதுகாப்பு குறைபாடு எதுவும் நடைபெறவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கோவாக்சின் ஏற்றுமதி நிறுத்தப்படுவதால் அதன் விநியோகம் பாதிக்கப்படவுள்ளது.
கடந்த மார்ச் 14 முதல் 22 வரை, பாரத் பயோடெக் நிறுவனத்தில் அவசர கால பயன்பாட்டுக்கு பிந்தைய ஆய்வு நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.