மெட்டா நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்படும் என ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். முக்கியமாக ட்விட்டர் ‘ப்ளூ டிக்’ பெற கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
மேலும், ட்விட்டர் பயனாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சந்தாதாரராக மாற்றும் முனைப்பில் ட்விட்டர் நிறுவனம் செயல்படுவதாக விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, த்ரெட்ஸ் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியது.
இன்ஸ்டாகிராம் கணக்கின் உள்நுழைவு மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி த்ரெட்ஸ் செயலியை பயன்படுத்தலாம் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்விட்டரை போன்று த்ரெட்ஸில் எழுத்துகளால் தங்களின் கருத்துகளை பதிவு செய்ய முடியும். பிற கணக்குகளை பின்தொடரலாம். 500 எழுத்துகள் வரை பதிவிட முடியும்.
மேலும், புகைப்படங்களும், 5 நிமிடங்கள் காட்சியாகும் விடியோக்களையும் த்ரெட்ஸில் பதிவு செய்ய முடியும்.
இந்த நிலையில், த்ரெட்ஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்ட 4 மணி நேரத்திற்குள் இதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது. தற்போது 1 கோடியைக் கடந்துள்ளது.
ட்விட்டரில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வரும் சூழலில், மெட்டாவின் ‘த்ரெட்ஸ்’ சமூக ஊடக பயன்பாட்டாளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ‘த்ரெட்ஸ்’ செயலி அறிமுகம் செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் மெட்டா நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்படும் என ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக மஸ்கின் தனிப்பட்ட வழக்குரைஞர் அலெக்ஸ் ஸ்பிரோ,மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க்கிற்கு அனுப்பிய கடிதத்தில், ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து வெளியேறி மெட்டா நிறுவனத்தில் இணைந்த ஊழியர்களைப் பயன்படுத்தி ட்விட்டரின் வர்த்தக ரகசியங்களை பயன்படுத்தி மற்றும் பிற அறிவுசார் சொத்துகளைத் தெரிந்துகொண்டு அதனை வேண்டுமென்றே மற்றும் சட்டவிரோதமாக பயன்படுத்தி ‘த்ரெட்ஸ்’ செயலியை மெட்டா நிறுவனம் உருவாக்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை என்றால் இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், ட்விட்டர் நிறுவனத்தின் அறிவுசார் சொத்துகள் திருடப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்வோம் என எச்சரித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள மெட்டா நிறுவனம், 'திரெட்ஸ்' செயலியின் தொழில்நுட்பக் குழுவில் முன்னாள் ட்விட்டர் ஊழியர்கள் யாரும் இல்லை. இது போலியான குற்றச்சாட்டு என்று மறுத்துள்ளது.
இதற்கு "போட்டி நல்லது, ஏமாற்று வேலையை" ஏற்க முடியாது என ட்விட்டரில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், தான் போட்டியை ஆதரிப்பதாகவும், ஆனால் ‘ஏமாற்று வேலையை’ ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இதனால் 'Twitter vs Threads' 'Twitter vs Threads' என ட்விட்டரும் மெட்டாவும் கடும் போட்டியில் இறங்கியுள்ளன.