தாராபுரம் அருகே தாய், மகள் தூக்கிட்டுத் தற்கொலை

தாராபுரம் அருகே குடும்ப சூழ்நிலை காரணமாக 10 வயது மகளைத் தூக்கிலிட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம் அருகே தாய், மகள் தூக்கிட்டுத் தற்கொலை

திருப்பூர்: தாராபுரம் அருகே குடும்ப சூழ்நிலை காரணமாக 10 வயது மகளைத் தூக்கிலிட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் காமராஜர் நகரை சேர்ந்தவர் காளிதாஸ்(25). இவரது மனைவி பூங்கொடி(28), இந்த தம்பதிக்கு வர்ஷா(10) என்ற மகளும் உள்ளார். 
காளிதாஸ் தனியார் நூற்பாலையில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக விடுதியிலே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

இதையடுத்து, அலங்கியத்தில் உள்ள தனது தாயார் சரஸ்வதி வீட்டில் வசித்து வந்த பூங்கொடி தாராபுரத்தில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். மேலும், மகளை அலங்கியத்தில் உள்ள அரசு பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்க வைத்துள்ளார். இதனிடையே, பூங்கொடி கடந்த சில மாதங்களாகப் பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே குரூப் 4 தேர்வுக்காகப் படித்து வந்துள்ளார். 

பூங்கொடி வேலைக்குச் செல்லாததால் குடும்பம் வறுமையில் இருந்து வந்ததால் மன வேதனை அடைந்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக திங்கள்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது மகளை சேலையால் தூக்கில் தொங்கவிட்டபடி, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

இதனிடையே, வெளியே சென்றிருந்த சரஸ்வதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது மகளும், பேத்தியும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த அலங்கியம் காவல் துறையினர் இருவரது சடலத்தையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

குரூப் 4 தேர்வு எழுதிய நிலையில் மறுநாள் பூங்கொடி மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அலங்கியம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com