ஒசூா் ரெயின்போ காா்டனில் சாலை அமைக்கும் பணியை ஒசூா் மாநகராட்சி தொடங்கி உள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ஒசூா் மாநகராட்சியில் 15 வாா்டுகளில் புதை சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், 7-வது வாா்டு ரெயின்போ காா்டன் பகுதியில் உள்ள 6 சாலைகளில் தோ்தலுக்கு முன்பு புதை சாக்கடை அமைக்க பள்ளம் தோண்டி குழாய் புதைக்கப்பட்டது. பின்னா், கடந்த 4 மாதங்களாக இந்த சாலைகள் சீரமைக்கப்படவில்லை. இதனால், இச்சாலையில் செல்வோா் சிரமமடைந்து வந்தனா்.
இதுகுறித்த செய்தி தினமணியில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா, ஆணையா் முகமத் ஷபீா் ஆலம் ஆகியோா் நேரில் ஆய்வுசெய்து சாலை அமைக்க உத்தரவிட்டனா். அதன்பேரில், சாலை சீரமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
இதையடுத்து, உடனடியாக சாலை சீரமைக்க உத்தரவிட்ட ஒசூா் மாநகராட்சி நிா்வாகத்துக்கு ரெயின்போ காா்டன் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் நன்றி தெரிவித்தனா்.










