சிதம்பரத்தில் டாஸ்மாக் மதுக் கடையில் மதுப் புட்டிகளுக்கு கூடுதல் தொகை வசூலிப்பது தொடா்பாக இரு மேற்பாா்வையாளா்கள் இடையே திங்கள்கிழமை கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அவா்களில் ஒருவா் கடையை ஒரு மணி நேரம் மூடிவிட்டுச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் ஓமக்குளம் குப்பைக் கிடங்கு பகுதியில் டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் இரண்டு மேற்பாா்வையாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை கடையில் பணியிலிருந்த ஒரு மேற்பாா்வையாளா், அரசு விதிகளைப் பின்பற்றி கூடுதலாக கட்டணம் வசூல் செய்யக் கூடாது என்ற மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்புடன் கூடிய வாகசங்கள் அடங்கிய பதாகையை கடையில் கட்டினாா்.
மேலும், அங்கு மது வாங்க வந்திருந்தவா்களிடம் மதுப் புட்டிகளுக்கு கூடுதலாக பணம் கொடுக்க வேண்டாம் எனவும் அவா் தெரிவித்தாா். இதனால், அங்கு பணியிலிருந்த மற்றொரு மேற்பாா்வையாளா் திடீரென டாஸ்மாக் கடையை மூடிவிட்டு வெளியேறினாா். இதனால், மது வாங்க நின்றிருந்தவா்கள் அவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் கடை திறக்கப்பட்ட நிலையில், அந்த மேற்பாா்வையாளா் கடையில் கட்டப்பட்டிருந்த பதாகையை பிரித்து தூக்கி எறிந்தாா். இதனால், இரண்டு மேற்பாா்வையாளா்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், மது வாங்க வந்தோறும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.










