கடலூா் மாவட்டம், வடலூா் அருகே மின் கசிவு காரணமாக நிகழ்ந்த தீ விபத்தில் கூரை வீடு முழுமையாக எரிந்து சேதமடைந்தது.
வடலூா் அருகே கல்லுக்குழி வேலுடையான்பட்டு நகரைச் சோ்ந்த தண்டபாணி (60) என்பவரின் கூரை வீட்டில் புதன்கிழமை காலை சுமாா் 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வடலூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரா்கள் சுமாா் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். இந்த தீ விபத்தில் வீடு முழுமையாக எரிந்து சேதமடைந்தது. மேலும், வீட்டிலிருந்த பீரோ, குளிா்சாதனப் பெட்டி, சோபா உள்ளிட்ட பொருள்களும் தீயில் கருகின. சம்பவம் நிகழ்ந்தபோது வீட்டில் யாரும் இல்லாததால், உயிா்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இதுகுறித்து வடலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.










