பெங்களூரு

தமிழ்த்துறை கனவு நிறைவேறுமா?

பெங்களூர், பிப். 6: தமிழ் செம்மொழித் தகுதி பெற்றிருந்தாலும், கர்நாடகப் பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை இல்லாத அவலம் நீடிக்கிறது. பெங்களூர் அல்லது மைசூர் பல்கலை.யில் விரைவில் தமிழ்த்துறையை உருவாக்க தமிழ

ந.முத்துமணி

பெங்களூர், பிப். 6: தமிழ் செம்மொழித் தகுதி பெற்றிருந்தாலும், கர்நாடகப் பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை இல்லாத அவலம் நீடிக்கிறது.

பெங்களூர் அல்லது மைசூர் பல்கலை.யில் விரைவில் தமிழ்த்துறையை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்ப் பேராசிரியர் தா. கிருட்டிணமூர்த்தி (படம்) வலியுறுத்தினார்.

உலக அளவில் உயிர்ப்போடு வாழ்ந்து கொண்டிருக்கும் மொழிக் குடும்பங்களில் முக்கியமானது திராவிட மொழிக் குடும்பம். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு மொழிகள் அடங்கிய இம்மொழிக் குடும்பத்தின் தாய்மொழி தமிழ் மொழிதான். இலக்கியம் மற்றும் இலக்கணச் செறிவுள்ள தமிழ் செம்மொழித் தகுதியையும் அண்மையில் பெற்றது. ஆனால், கர்நாடகப் பல்கலை.களில் தமிழ்த்துறை இல்லை.

இதனால் கன்னட மண்ணில் வாழும் தமிழ் மக்கள், தாய்மொழியில் உயர்கல்வி படிக்க தமிழகத்துக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

கர்நாடகத்தில், பெங்களூர் அல்லது மைசூர் பல்கலை.யில் தமிழ்த்துறை அமைக்க வேண்டும் என்று ஆரம்பகாலம் தொட்டு குரல்கொடுத்து வருபவர்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர் தா. கிருட்டிணமூர்த்தி.

கர்நாடக அரசுக் கல்லூரிகளில் 37 ஆண்டுகாலம் தமிழ்ப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள இவர், 1957-ம் ஆண்டு கோலார் அரசினர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். 1994-ம் ஆண்டு மகாராணி கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

கன்னடக் கவிஞர் சார்வக்ஞரின் வசன இலக்கியத்தை 2 ஆயிரம் வெண்பாக்களாக தமிழில் மொழிபெயர்த்தவர் இவர். கர்நாடகத்தில் இதுவரை பல்கலைக் கழக தமிழ் இருக்கை உருவாகாமல் இருப்பதற்கு வேதனை தெரிவிக்கும் இவர், அதற்கான காலம் கனிந்துள்ளதாக நம்பிக்கையுடன் கூறுகிறார்.

தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் இடையிலானது தொப்புள் கொடி உறவு. தமிழகத்தில் மதுரை காமராஜர் பல்கலை. போன்றவற்றில் கன்னட மொழிக்கு தனித்துறை உள்ளது. எனவே, கர்நாடக பல்கலை.களில் தமிழ்த்துறை இயல்பாக இருக்க வேண்டும். ஆனால் இதுவரை அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

பெங்களூர் அல்லது மைசூர் பல்கலை.யில் தமிழ்த்துறை இருந்தால், அது கிருஷ்ணகிரி, ஓசூர், தளி போன்ற எல்லைப்புறப் பகுதிகளில் வசிக்கும் தமிழர்களுக்கு உதவியாக இருக்கும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

திருவள்ளுவர் சிலை திறப்புக்கு பிறகு தமிழர்-கன்னடர் உறவு மேம்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் தமிழ் இருக்கை கனவும் நிறைவேறும் என்று நம்புகிறேன் என்றார் தா. கிருட்டிணமூர்த்தி.

ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் திருட்டு

பெங்களூர் கோரமங்களா 80 அடிச்சாலையில் உள்ளது ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் மையம். ஞாயிற்றுக்கிழமை இதன் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ. 13 லட்சம் ரொக்கப்பணத்தை யாரோ திருடிச் சென்றுள்ளனராம். இது குறித்து தகவல் அறிந்த கோரமங்களா போலீஸôர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

பெண் சாவில் மர்மம்: போலீஸ் விசாரணை

பெங்களூர் ஜே.பி.நகர் பிடிஏ லே-அவுட்டில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் நாகராணி (24). தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணியாற்றி வந்தார். அறைக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை வருவதாக நண்பர்களிடம்  கூறிவிட்டுச் சென்ற அவர், இரவு நீண்ட நேரமாகியும் வரவில்லையாம்.

இதையடுத்து அவரது அறைக்கதவை உடைத்துப் பார்த்தபோது, குளியலறையில் நாகராணி இறந்து கிடந்தாராம். இது குறித்து ஜே.பி. நகர் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

லாரியில் தீ: ஓட்டுநர் சாவு

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா மங்களம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (40). டேங்கர் லாரி ஓட்டுநரான இவர் மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஏற்றிச் செல்லும் லாரியின் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு நிறுவனத்தின் வளாகத்தில் லாரியை நிறுத்திவிட்டு கேபினில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாராம். இந்நிலையில், நள்ளிரவு லாரி கேபினில் வைத்திருந்த கொசுவர்த்தி சுருள் போர்வையில் பட்டு தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ரவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை இறந்தார். அவருக்கு மனைவி ராஜகுமாரி, மகள், மகன் உள்ளனர்.

இது குறித்து சூரத்கல் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக்யராஜ் செய்த துரோகம்... கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த சுந்தர்ராஜன்!

நல்லகண்ணு மறைவு : தலைவர்கள் இரங்கல்

டி20 உலகக் கோப்பையில் ஹாரி புரூக் படைத்த உலக சாதனை!

நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!

மக்கள் அஞ்சலிக்காக சென்னை தி. நகர் இந்திய கம்யூ. அலுவலகத்தில் நல்லகண்ணு உடல் வைக்கப்படுகிறது!

SCROLL FOR NEXT