முகப்பு
பெங்களூரு

அரசின் செயல்பாடுகளில் தலையிடுகிறார் ஆளுநர் கிரண்பேடி

மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுகிறார் ஆளுநர் கிரண்பேடி என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

Updated On : 1 ஜனவரி, 2018 at 1:35 AM
பகிர்:

மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுகிறார் ஆளுநர் கிரண்பேடி என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம்,  உடுப்பி மாவட்டம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் செல்லும் வழியில் ஞாயிற்றுக்கிழமை மங்களூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
புதுச்சேரி மாநிலத்தில் மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளை காங்கிரஸ் அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.  ஆனால், அரசின் செயல்பாடுகளில் ஆளுநர் கிரண்பேடி தேவையில்லாமல் தலையிட்டு வருகிறார்.  என்றாலும்,  தடைகளைத் தகர்தெறிந்து வளர்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.  தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக,  திமுக உள்ளிட்ட 2 மாநிலக் கட்சிகள் மட்டுமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ரஜினியின் புதிய கட்சி,   தமிழக மக்களிடையே எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.  விரைவில் புதுச்சேரியிலிருந்து பெங்களூரு, கோவை,  கொச்சி,  திருப்பதி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவை தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.
புதுச்சேரி மாநிலம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு செய்து வருகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.