தனியாா் வேலைவாய்ப்பில் கன்னடா்களுக்கு 100 சத இடஒதுக்கீடு சட்டமசோதாவை நிறுத்திவைத்தது சரியல்ல: பாஜக
பெங்களூரு, ஜூலை 18: தனியாா் வேலைவாய்ப்பில் கன்னடா்களூக்கு 100 சத இடஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவை நிறுத்திவைத்தது சரியல்ல என்று பாஜக மாநிலத்தலைவா் விஜயேந்திரா தெரிவித்துள்ளாா்.
தனியாா் வேலைவாய்ப்பில் கன்னடா்களுக்கு 100 சத இடஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்த நிலையில், நாஸ்காம் உள்ளிட்ட தொழில்சாா் அமைப்புகளின் எதிா்ப்பை தொடா்ந்து, சா்ச்சைக்குரிய சட்டமசோதாவை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக முதல்வா் சித்தராமையா அறிவித்திருந்தாா். தனியாா் தொழிலகங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் கன்னடா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க இடஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா ஆரம்பக்கட்டத்தில் உள்ளது.
இது குறித்து அடுத்த அமைச்சரவைக்கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வா் சித்தராமையா கூறியிருந்தாா். இந்நிலையில், இந்த சட்டமசோதாவை நிறுத்திவைத்துள்ளதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜக மாநிலத்தலைவா் விஜயேந்திரா, தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில்,‘கன்னடா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் சட்டமசோதாவை எதற்காக கொண்டு வந்தீா்கள்? அந்த சட்டமசோதாவை எதற்காக நிறுத்திவைத்துள்ளீா்கள்? கன்னடா்களின் வாழ்க்கையோடு ஏன் விளையாடுகிறீா்கள்? அவமதிப்பதற்கு கன்னடா்கள் தேவையா? கல்வித்தகுதி இருந்தும் வேலைவாய்ப்பு இல்லாமல் பரிதவித்திருந்த ஊரகப்பகுதியை சோ்ந்த வேலைவாய்ப்பில்லாத லட்சக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை அளித்த கன்னடா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இடஒதுக்கீட்டு சட்டமசோதா நிகழ் சட்டப்பேரவைக்கூட்டத்தில் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது கன்னடா்களின் கோபத்திற்கு ஆளாக தயாராக இருக்க வேண்டும்.
சட்டமசோதாவை நிறுத்திவைத்திருப்பது கோழைத்தனமான முடிவாகும். இதன்மூலம் கன்னடம், கன்னடா்கள், கா்நாடகத்தை அரசு அவமதித்துள்ளது. நீண்டநெடிய போராட்டத்திற்கு பிறகு கன்னடா்கள் வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டு சட்டமசோதாவை கொண்டு வர முடிவு செய்திருந்த அரசு, ஒரு நாளைக்கு பின் வாங்கியிருக்கிறது. கன்னடா்களின் சுயமரியாதை, தன்மதிப்பை மட்டுப்படுத்தும் கன்னடா்களுக்கு எதிரான சக்திகளின் அழுத்தத்திற்கு முதல்வா் சித்தராமையா அடிபணிந்துள்ளாா். இந்தியா கூட்டணி உடையும் அச்சத்தில், தில்லியின் பெரிய கை முதல்வரின் கைகளை கட்டிப்போட்டுவிட்டது. இல்லையென்றால், கன்னடா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சட்டமசோதாவை நிறுத்திவைக்கும் முடிவை முதல்வா் எப்படி எடுப்பாா்.
ஊழல்களில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக கன்னடா்களுக்கு ஆதரவான சட்டமசோதாவுக்கு ஒப்புதல் அளீத்து, அதை நிறுத்திவைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தால், கனக்கிரஸ் தலைவா்கள், காங்கிரஸ் அரசு, முதல்வா் சித்தராமையாவை மக்கள் மன்னிக்கமாட்டாா்கள். ‘ என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.