கர்ப்பிணி கொலை: கணவர் தப்பியோட்டம்
கர்ப்பிணி கொலை வழக்கில், கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கர்ப்பிணி கொலை வழக்கில், கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மைசூரு மாவட்டத்துக்குள்பட்ட நஞ்சன்கூடு நீலகண்டா லேஅவுட்டைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி லட்சுமி (21). 10 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் வாடகை வீட்டில் தனியாக குடியிருந்துவந்தனர். தற்போது லட்சுமி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஜய், லட்சுமியின் கழுத்தை நெரித்து, தூக்கிலிட்டாராம். இதில் லட்சுமி இறந்தார். பின்னர், விஜய் தப்பிச் சென்றுவிட்டாராம்.
தகவலின்பேரில் போலீஸார் அங்கு சென்று, லட்சுமியின் சடலத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுமதித்தனர். இதுகுறித்து நஞ்சன்கூடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.