பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!
பெங்களூரு போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள் அமைக்க ஒப்புதல்
போக்குவரத்து நெரிசல் என்றாலே பெங்களூர் நினைவுக்கு வரும் அளவுக்கு பெயர்போன ஊராக மாறியிருக்கும் நிலையில், 75.6 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள், உயர்மட்ட சாலைகள் அமைக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரூ.13,262 கோடி செலவில், 75.6 கிலோ மீட்டர் தொலைவுக்கு 11 புதிய மேம்பாலங்கள் மற்றும் உயர்மட்ட சாலைகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதனால், பெங்களூரில் நெடுநாளாக நீடிக்கும் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. யெஷ்வந்த்பூர் முதல் கேஆர் புரம் வரையிலான 28 கிலோ மீட்டர் தொலைவுக்கும், ரகிகுட்டா - தலகட்டபுரா இடையே மற்றும் பல குறுகிய தொலைவுகளுக்கும் மேம்பாலங்களும் உயர்மட்ட சாலைகளும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Advertisement
தற்போதுள்ள போக்குவரத்து நடைமுறைகளை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கண்காணித்து, புதிய மேம்பாலத் திட்டங்கள் போடப்பட்டுள்ளன. நகரம் முழுவதும் ஓரிடத்திலிருந்து புறப்பட்டால், சென்றடையும் இடம் வரை எந்த நெருக்கடியும் இல்லாமல் இருக்கும் வகையில் மேம்பால திட்டங்கள் போடப்பட்டுள்ளன.
பையப்பனஹள்ளி அருகே சாலைச் சந்திப்பில் மேம்பாலம் அமைக்கவும் திட்டத்தில் வழிவகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மத்திய பெங்களூரிலிருந்து வடக்குப் பகுதிக்கு எளிதாக செல்ல முடியும். இது தவிர, இரண்டு ரயில் மேம்பாலங்களுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், விரைவில் பெங்களூரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என கூறப்படுகிறது.