30+ ஆகிவிட்டதா? பெண்கள் கட்டாயம் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்!
பெண்கள் கட்டாயம் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள் பற்றி...
இப்போதெல்லாம் 30 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே உடல்ரீதியாக பல்வேறு தொந்தரவுகள் வந்துவிடுகின்றன. மாறிவரும் வாழ்க்கைச் சூழல், உணவுப்பழக்கவழக்கம் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அதேபோல பெண்கள் பலரும் வீடு, அலுவலகம் என இரண்டையும் கவனிப்பதில் அவர்களுக்கு தங்களைக் கவனித்துக்கொள்ள நேரமிருப்பதில்லை, பெரிதாக கவனித்துக்கொள்ள விரும்புவதுமில்லை.
இதனால் 35 வயதுக்கு மேலாக பெண்கள் பல்வேறு உடல் தொந்தரவுகளை எதிர்கொள்கின்றனர். இதனைத் தவிர்க்க பெண்கள், குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதுபோல தங்களது உடல்நலத்தையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
அந்த வகையில் பெண்கள் 30 வயதுக்கு மேல் ஆகிவிட்டால் குறிப்பிட்ட பரிசோதனைகளைத் தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
Advertisement
மார்பகப் புற்றுநோய் பரிசோதனை
இந்தியாவில் அதிகரித்து வரும் புற்றுநோய்களில் ஒன்று மார்பகப் புற்றுநோய். பலருக்கும் இதற்கான அறிகுறிகள் பெரிதாக இல்லை என்பதால் அது முற்றும்வரை யாருக்கும் தெரிவதில்லை. அதனால் 30 வயது முதலே பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்கான 'மாமோகிராம்' பரிசோதனையைத் தொடர்ந்து செய்துகொள்ள வேண்டும்.
கருப்பைவாய்ப் புற்றுநோய்
அதேபோல கருப்பைவாய்ப் புற்றுநோய் பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்த 'பாப் ஸ்மியர்' பரிசோதனையையும் செய்ய வேண்டும். மருத்துவரின் அறிவுரைப்படி குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்வது அவசியம். குறைந்தது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்ய வேண்டும். இந்தியாவில் 14 வயது நிறைவடைந்த பெண் குழந்தைகளுக்கு பள்ளியிலேயே கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
ஹீமோகுளோபின்
பெண்களுக்கு ஹீமோகுளோபின் குறைவினால் ரத்த சோகை ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க அவ்வப்போது ஹீமோகுளோபின் அளவைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொண்டு சரிசெய்ய வேண்டும்.
ரத்த அழுத்தம்
உயர் ரத்த அழுத்தம் இருந்தால் இதய நோய், பக்கவாதம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துவதனால் அதிலிருந்து காக்க ரத்த அழுத்த பரிசோதனை அவ்வப்போது செய்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் இருக்கும்பட்சத்தில் தொடர்ச்சியாக பரிசோதனை செய்து மருத்துவரின் அறிவுரைப்படி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
ரத்த சர்க்கரை பரிசோதனை
கட்டுப்பாட்டில் இருந்தாலும் மரபியல் காரணங்களால் உடல் பருமனால் இன்று பலருக்கும் நீரிழிவு இருக்கிறது. அதனால் நீரிழிவை ஆரம்ப நிலையிலையே கண்டறிய பரிசோதனைகள் அவசியம்.
தைராய்டு பரிசோதனை
பெண்கள் குறிப்பாக கர்ப்பமடையும்போது தைராய்டு பிரச்னையை எதிர்கொள்கிறார்கள். சிலருக்கு கர்ப்ப காலம் முடிந்ததும் சரியாகிவிடுகிறது. சிலருக்கு தொடர்கிறது. எனவே, தைராய்டு பரிசோதனையும் பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய ஒன்று. உடல் எடை அதிகரிப்பு, முடி உதிர்தல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளுக்கு காரணமாகிறது.
கொலஸ்ட்ரால் பரிசோதனை
உடலில் கொழுப்பு அளவு அதிமாக இருந்தாலும் ரத்த அழுத்தம், இதய நோய் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதால் உடலில் குறிப்பாக ரத்தத்தில் கொழுப்பின் அளவை தெரிந்துகொள்ளும் 'லிப்பிட்' பரிசோதனை செய்வது நலல்து.
எலும்பு அடர்த்தி பரிசோதனை
மாதவிடாய் நின்ற பெண்களுக்கு கால்சியம் அளவு குறைந்து எலும்புகள் பலவீனமடைவதைத் தடுக்க கால்சியம் மற்றும் எலும்பு அடர்த்தி பரிசோதனை அவசியம்.
வைட்டமின் பரிசோதனை
அதேபோல எலும்பு ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் டி அளவையும் சரிபார்க்கவும். வேறு ஏதேனும் உடல் தொந்தரவுகள் இருந்தால் உடலில் எந்த வைட்டமின் அளவு குறைபாடு இருக்கிறது என மருத்துவரின் அறிவுரைப்படி பரிசோதனை செய்து கண்டறியவும்.
கண் பரிசோதனை
பெண்கள் மட்டுமின்றி அனைவருக்குமே கண் பரிசோதனை அவசியம்.
உடல் எடை
உடல் எடைதான் அனைத்துக்கும் அடித்தளமாக இருக்கிறது. உடல் பருமனால்தான் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே உடல் எடையை அவ்வப்போது சரிபார்த்து அதற்கேற்ப உடற்பயிற்சி, உணவுப்பழக்கவழக்கம் என உடல் எடையை நிர்வகிக்க வேண்டும்.