தலைமைச் செயலரின் பணிக் காலத்தை நீட்டிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு கர்நாடகம் கோரிக்கை
சட்டப்பேரவைத் தேர்தலை காரணம் காட்டி, வரும் 31-ஆம் தேதி ஓய்வு பெறும் கர்நாடக தலைமைச் செயலரின் பணிக் காலத்தை
சட்டப்பேரவைத் தேர்தலை காரணம் காட்டி, வரும் 31-ஆம் தேதி ஓய்வு பெறும் கர்நாடக தலைமைச் செயலரின் பணிக் காலத்தை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கர்நாடகம் கடிதம் அனுப்பியுள்ளது.
கர்நாடக கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ரத்னபிரபா, கடந்தாண்டு நவம்பர் மாதம் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1981-இல் பணியில் சேர்ந்த இவர் வரும் மார்ச் 31-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்.
இதனிடையே, சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே 12-ஆம் தேதி நடைபெறுவதால் ரத்னபிரபாவின் பணிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இதுவரை மத்திய அரசிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை.
எனினும், கடந்த 2013-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில் அப்போதைய தலைமைச் செயலாளர் எஸ்.வி.ரங்கநாத்தின் பதவிக்காலத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்குமாறு கேட்டு அப்போதைய முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அனுப்பிய கடிதத்தை மத்திய அரசு ஏற்று கொண்டது. அதேபோல, ரத்னபிரபாவின் பதவிக்காலமும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.